*மதுரையில் அமைச்சர் ஜெயராஜ்
மதுரை : விடுதலைப் புலிகளுக்கெதிராக இலங்கை அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு இந்தியா முழு ஒத்துழைப்பும் அளித்து வருவதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
பெரிய வெள்ளியை முன்னிட்டு மதுரை புனித மரியன்னை தேவாலயத்தில் நடைபெற்ற விஷேட பிரார்த்தனையில் கலந்துகொண்ட அமைச்சர் பெர்னாண்டோ புள்ளே, அதன் பின்னர் அங்கு பத்திரிகையாளர்களுடன் உரையாடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்,
விடுதலைப் புலிகள் மாறுவேடமணிந்து தமிழக மீனவர்களைச் சுட்டுக்கொன்று விட்டு இலங்கை அரசு மீது பழிபோட்டு வருகின்றனர். இலங்கை அரசு மீது
இந்தியாவுக்கு விரோதத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே விடுதலைப் புலிகள் இவ்வாறு செயற்படுகின்றனர். அவர்களது இந்த எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது.
இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வின் மூலம் தீர்வுகானவே இலங்கை அரசு விரும்புகிறது. தமிழர்களில் 95 சதவீதமானோர் சமாதானமாகவே வாழ விரும்புகின்றனர். இதற்காக இலங்கை அரசுடன் புலிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்றும் விரும்புகின்றனர்.
ஆனால் விடுதலைப் புலிகள் சமாதானத்திற்கு வர மறுக்கின்றனர். நாட்டை இரண்டாகத் துண்டாடுவதே அவர்களது குறிக்கோளாகும். ஆனால் அது நிறைவேறாது.அரசு அதற்கு ஒருபோதும் இடமளிக்காமாட்டாது.
சமாதானப்பேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கை அரசு எப்போதுமே தயாராகவுள்ளது. எனினும் விடுதலைப் புலிகள் இவ்வாறான பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கை வைக்காது நாட்டில் பிரச்சினைகளை உருவாக்கவே முயல்கின்றனர்.
2006 இல் ஜெனீவாவில் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளில் அரசசார்பில் நானும் கலந்து கொண்டேன். ஆனால் பேச்சுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி அதனை வெற்றிபெறச் செய்வதற்கு அவர்கள் விரும்பாததை நான் நேரில் அவதானித்தேன்.
அவர்கள் சமாதானத்தை விரும்பவில்லையென்பதற்கு இது நல்லதொரு உதாரணம்.
விடுதலைப் புலிகளின் நடவடிக்கைள் குறித்து இந்திய அரசுக்கு நன்கு தெரியும், இதனால் தான் இந்த விடயத்தில் இலங்கை அரசுக்கு இந்தியா பூரண ஆதரவு வழங்குகிறது.
இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு தேர்தல்கள் நடத்தப்பட்டு மாகாண அரசுகள் செயற்படவுள்ளன. கடந்த மாதம் 28 ஆம் திகதி கிழக்கில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெற்று மக்கள் பிரதிநிதிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.