பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் முக்கோண ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை பங்குபற்றுமாறு, பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
மார்ச் மாதம் 29 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி வரை, அவுஸ்திரேலிய அணிக்கும், பாகிஸ்தான் அணிக்குமிடையில் 2 டெஸ்ட்போட்டிகளும், 3 ஒரு நாள் போட்டிகளும் பாகிஸ்தானில் நடைபெற இருந்தது. ஆனாலும், பாகிஸ்தானில் தொடர்ந்து நடைபெறும் குண்டுத் தாக்குதல்களினால் பலர் பலியானதைத் தொடர்ந்து பாதுகாப்பின் நிமித்தம் பாகிஸ்தான் செல்வதை அவுஸ்திரேலிய அணி ரத்துச் செய்துள்ளது.
இக்காலப் பகுதியில் முக்கோண ஒரு நாள்போட்டி ஒன்றை பாகிஸ்தானில் நடத்துவதென, பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் முடிவு செய்தது . 5 போட்டிகளைக் கொண்ட இத் தொடரில், பங்குபற்றுவதற்கு பங்களாதேஷ் கிரிக்கெட் அணி முன்கூட்டியே சம்மதம் தெரிவித்து விட்டது.
3 ஆவது அணியாக இலங்கை அணியை பங்குபற்றுமாறு, பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத் தலைவர் நஷீம் அஸ்ரப் அழைப்பு விடுத்திருந்தார். இது சம்பந்தமான பேச்சுவார்த்தை, ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்காலத் தலைவர் அர்ஜுணரணதுங்கவுக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்துக்குமிடையில், கடந்த வியாழக்கிழமை பாகிஸ்தானில் நடைபெற்றது.
"இப்பேச்சுவார்த்தை சிறந்த முறையில் நடைபெற்றுள்ளது. இதனால் இந்த முக்கோண ஒரு நாள் கிரிக்கெட்போட்டியில் இலங்கை அணி பங்குபற்றும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத் தலைவர் நஷீம் அஸ்ரப் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.