2008 ஆம் ஆண்டுக்கான ரஜரட்ட சைக்கிள் ஓட்டப் போட்டியில் ஆண்கள் பிரிவில் பொலிஸ் அணியைச் சேர்ந்த சுதாரநிலங்காவும் பெண்கள் பிரிவில் அநுராதபுர சைக்கிள் ஓட்ட கழகத்தைச் சேர்ந்த குணதிலகாவும் வெற்றிபெற்றுள்ளன.
இப்போட்டியை இலங்கை சைக்கிள் சம்மேளனமும் அநுராதபுரம் சைக்கிள் ஓட்டக் கழகமும் இணைந்து கடந்த வாரம் அநுராதபுரத்தில் நடத்தியது.
ஆண்களுக்கான 286.5 கிலோ மீற்றர் தூர ஓட்டப் போட்டி இரண்டு நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் போட்டி அநுராதபுரத்தில் இருந்து பொலநறுவைக்கும் 2 ஆம் நாள் போட்டி பொலநறுவையில் இருந்து அநுராதபுரத்துக்குமிடையில் நடைபெற்றது.
200க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்குபற்றிய இப்போட்டியில் பொலிஸ் அணியைச் சேர்ந்த வீரர் நிலங்கா 7 மணித்தியாலம் 19 நிமிடம் 57 விநாடிகளில் குறிப்பிட்ட தூரத்தை கடந்து 1 ஆம் இடத்தையும் 2 ஆம் இடத்தை வீரர் சுதானாவும் 3 ஆம் இடத்தை லக்ஷ்மன் விஜயரட்ணவும் பெற்றனர்.
பெண்களுக்கான 51 கிலோ மீற்றர் தூரத்தை மொரட்டுவ சைக்கிள் ஓட்டக் கழகத்தைச் சேர்ந்த வீராங்கனையான குணதிலகா குறிப்பிட்ட தூரத்தை 1 மணித்தியாலம் 31 விநாடிகளில் கடந்து 1 ஆம் இடத்தையும் ஸ்ரீயலதா 2 ஆம் இடத்தையும் நிலூகா 3 ஆம் இடத்தையும் பெற்றனர்.
ஆண்கள் பிரிவில் 1 ஆம் இடத்தைப் பெற்ற வீரருக்கு பெருமளவு பரிசுப் பொருட்களும் 50 ஆயிரம் ரூபாவும் பெண்கள் பிரிவில் 1 ஆம் இடத்தைப் பிடித்த வீராங்கனைக்கு பரிசுப் பொருட்களுடன் 15 ஆயிரம் ரூபாவும் பரிசாக வழங்கப்பட்டது.