ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழு (யு.என்.எச்.ஆர்.சி.) விலிருந்து வெளியேற்றப்படக்கூடிய அபாயத்தை இலங்கை எதிர்நோக்கியுள்ளது.
ஆசிய நாடுகளுக்கான அங்கத்துவத்துக்காக எதிர்வரும் மே மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இலங்கைக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளது.
இரு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இத்தேர்தல் கடைசியாக 2006 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி நடைபெற்றது. அப்போதிருந்த தேர்தல் நடைமுறையின்படி ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் வகிக்கும் 192 நாடுகளிடையே நடாத்தப்படும் இரகசிய வாக்கெடுப்பில் இலங்கை 125 தொடக்கம் 130 வரையிலான வாக்குகளைப் பெற்றால் மட்டுமே அங்கத்துவத்தைப் பெறக்கூடிய வாய்ப்பிருக்கிறது.
ஆனால், தற்போது இந்த அங்கத்துவத்தை இழக்கக்கூடிய அபாயம் இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது. 47 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தொடர்ந்தும் இடம்பெறவேண்டுமானால் எதிர்வரும் மேமாத நடுப்பகுதியில் இடம்பெறவுள்ள தேர்தலில் இலங்கை வெற்றி பெறவேண்டும்.
இத் தேர்தலில் ஆசிய நாடுகளுக்கான 4 இடங்களில் ஒன்றைப்பெற இலங்கை, ஜப்பான், பாகிஸ்தான், தென்கொரியா, மற்றும் பஹ்ரெய்ன் ஆகிய நாடுகளுடன் போட்டியிட வேண்டும்.
இவற்றில் முதல் 3 நாடுகளும் ஏற்கனவே அங்கத்துவத்தைப் பெற்றுள்ளன. மே மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் இலங்கை அல்லது பஹ்ரெய்ன் வெளியேற்றப்படலாம்.
ஆணைக்குழுவின் புதிய தேர்வு முறைப்படி அங்கத்தவர்கள் நியூயோர்க்கில் நடைபெறும் ஐ.நா.சபையின் பொதுக்கூட்டத்தில் நேரடியாகத் தெரிவு செய்யப்படுவார்கள்.
அரசியல் வல்லுநர்கள் இது தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையில், மனித உரிமைகள் உயர் மட்டத்தில் பேணிப் பாதுகாக்கப்படும் நாடே இதற்காகத் தெரிவு செய்யப்படவேண்டும் என்னர்.
இதேவேளை, சில யு.என்.எச்.ஆர்.சி.அங்கத்துவ நாடுகள் இதனைவிட இலங்கைக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அங்கத்துவம் வழங்குவது தொடர்பாக ஆணைக்குழு மீளாய்வு செய்ய வேண்டுமென ஏகமனதாகத் தெரிவித்துள்ளன.
இத்தேர்தலில் பஹ்ரெய்ன் தோல்வி அடைந்தால் அது இலங்கைக்குச் சாதகமாக அமையும். வாக்களிக்கும் 192 நாடுகளில் குறைந்த பட்சம் தேவையான வாக்குகளை பஹ்ரெய்ன் பெறாவிட்டால் மட்டுமே இது சாத்தியமாகும்.
ஆரம்பத்திலிருந்தே இரகசிய வாக்கெடுப்பு மூலமே இத்தேர்தல் நடைபெறுவதால் எந்த நாடு வெளியேற்றப்படும் என்பதை எதிர்வு கூறுவது கடினமானதாகவே உள்ளது.
இதேவேளை, இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் சகல கட்சிகளையும் சேர்ந்த உறுப்பினர்கள் இலங்கையின் தற்போதைய நிலைமைகளை நேரடியாக அறிந்து கொள்வதற்காக பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அனுப்பப்பட்டுள்ளனர்.
ஒருவாரகாலம் இலங்கையில் தங்கியிருக்கம் இவர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்திப்பதுடன் கிழக்கு மாகாணத்திற்கும் விஜயம் செய்து அங்குள்ள தற்போதைய நிலைமைகளையும் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் அறிந்து கொள்ளவுள்ளனர்.
பிரிட்டிஷ் பிரதிநிதிகளின் விஜயத்தின் பின் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கவுள்ள தற்போதைய இலங்கை நிலைவரம் தொடர்பாக, பிரிட்டிஷ் வெளிநாட்டமைச்சின் செயலாளர் டேவிட் மிலிபன்ட் வெளியிடவுள்ள அறிக்கை இலங்கைக்கு பாதகமாகவே அமையுமென அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.