இலங்கை, மே.இந்திய தீவு அணிகளுக்கிடையே கயானாவில் ஆரம்பமாகியுள்ள 1 ஆவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்ட முடிவில் முதலில் துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 269 ஓட்டங்களைப் பெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது. இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான வர்ணபுரவும், வன்டொற்ரும் நிதானத்துடனும் பொறுப்புடனும் துடுப்பெடுத்தாடி 130 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றபோது வன்டொற் எல்.பி.டபிள்யூ. முறையில் 52 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இதன்பின் தனது 3 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் மலிந்த வர்ணபுர சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி 226 பந்துகளைச் சந்தித்து 14 பவுண்டரிகள் அடங்கலாக 120 ஓட்டங்களைப் பெற்றபோது ஆட்டமிழந்தார். இவர் இப்போட்டிக்கு முன் இலங்கை அணிக்கும் கயானா தலைவர் அணிக்குமிடையில் நடைபெற்ற 3 நாள் பயிற்சிப் போட்டியில் 1 வது இனிங்ஸில் 124 ஓட்டங்களையும் 2 ஆவது இனிங்ஸில் 53 ஓட்டங்களைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
இதன் பின் சோடிசேர்ந்த இலங்கை அணியின் பிரதித் தலைவர் குமார் சங்ககாரவும் தலைவர் மஹேல ஜெயவர்த்தனவும் ஓட்ட எண்ணிக்கையை 243 ஆக உயர்த்தியபோது குமார் சங்ககார 50 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து திலான் சமரவீரவும் ஓட்டங்கள் எதனையும் எடுக்காத நிலையில் ஆட்டமிழந்தார்.
முதல் நாள் ஆட்டம் முடிவடையும்போது மஹேல ஜெயவர்த்தனா 25 ஓட்டங்களுடனும் டில்சான் 15 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது இருந்தனர்.
பந்துவீச்சில் ரெயிலர் 59 ஓட்டங்களைப் கொடுத்து 3 விக்கெட்டுக்களையும் பிறவோ 48 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.