* `ஆயுதப் போரை கைவிட்டோம் எங்களின் நிலைக்கு பதில் என்ன?'
கிழக்கு மாகாணத் தேர்தல்களை ரத்து செய்வதற்கு இந்தியாவை தலையிடுமாறு வலியுறுத்தியுள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுபூர்வமான வாழ்விடமான வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரித்தமை இலங்கை இந்திய உடன்படிக்கையை மீறிய செயற்பாடெனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ் ஈழவிடுதலை இயக்கத்தைச் சேர்ந்த ஷ்ரீகாந்தா, சிவாஜிலிங்கம், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் சென்னையில் நிருபர்களுக்கு ஞாயிறன்று கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது;
இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் அவல நிலையை போக்குவதற்காகவும், அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காகவும் கடந்த 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி, அன்றைய இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனாவும் சேர்ந்து இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை கொண்டு வந்தனர். இந்த ஒப்பந்தம் அரசியல் பயணத்தில் ஒரு முக்கியமான மைல் கல் ஆகும்.
இந்த ஒப்பந்தம் தமிழர்களின் வரலாற்று வாழ்விடமாக இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை அங்கீகரித்தது. சிங்கள மொழியை போன்று தமிழையும் இலங்கை அரசு ஏற்றுக்கொண்டது. இது 9 மாகாணங்களில் எதிரொலித்தது. 2 மாகாணங்கள் ஒரே மாகாணமாக இணைக்கப்பட்டது. 1988 இல் தேர்தல் நடத்தப்பட்டது.
அதன் பின்னர் இந்திய அமைதிப்படை இலங்கையை விட்டு வெளியேறேியதன் விளைவாக அங்கு அரசியல் மாற்றம் ஏற்பட்டது. 1990 ஆம் ஆண்டு வடகிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டது. இன்று அதற்கு தேர்தல் நடத்தப்படவில்லை. இந்த நிலையில் 2006 ஆம் ஆண்டு ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி) கட்சி சார்பில் உயர்நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. வடக்கு, கிழக்கு என்று மாகாணங்களை இலங்கை அரசு பிரித்தது சரிதான் என்று தீர்ப்பு கூறப்பட்டது. மாகாணங்களை பிரித்து, தற்போது கிழக்கு மாகாணத்திற்கு மட்டும் தேர்தல் நடத்த இலங்கை அரசு முயற்சி செய்து வருகின்றது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 27 ஆம் திகதி நடைபெறுகிறது. முன்பு போல் வடக்கு - கிழக்கு மாகாணங்களை இணைக்க வேண்டும். இதற்கு தமிழ் விடுதலை இயக்கம் ஆதரவு தரும். ஆனால் இலங்கை அரசு மாகாணங்களை பிரித்து தேர்தல் நடாத்துவதிலே கண்ணும் கருத்துமாக இருக்கிறது. தமிழ் மக்களை பற்றி கவலைப்படவில்லை. இந்திய அரசின் ஒப்பந்தத்தை நம்பி தான் நாங்கள் ஆயுத போரை கைவிட்டோம். தற்போது எங்களின் நிலைக்கு இந்திய அரசு என்ன பதில் சொல்லப்போகிறது. இலங்கை அரசு எங்களை கேள்விக்குறியாக்கி உள்ளது. எங்கள் நலன் காக்க முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொண்டு வந்த ஒப்பந்தத்தை இலங்கை அரசு மீறுகிறது.
கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் மிகவும் பலவீனமாக இருக்கிறார்கள். முன்பு 60 சதவீதத்திற்கு மேல் தமிழ் மக்கள் இருந்தார்கள். சிங்கள மக்கள் 8 சதவீதம் இருந்தார்கள். இப்போது சிங்கள இன மக்கள் 30 சதவீதத்திற்கு மேலாக அங்கே வசிக்கின்றார்கள். தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். தமிழ் மக்களின் எண்ணங்களுக்கு விரோதமாக நடத்தப்படும் இந்த கிழக்கு மாகாண தேர்தல் ரத்து செய்யப்பட வேண்டும். மீண்டும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைக்க வேண்டும். இதற்காக இலங்கை பாராளுமன்றத்தில் புதிய சட்ட மசோதா கொண்டு வர வேண்டும்.
இது சம்பந்தமாக இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரியிடம் எங்கள் நிலையை விளக்கி மனு கொடுத்துள்ளோம். இந்த விடயத்தில் இந்திய அரசு மிகத் தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இன்னும் இந்திய- இலங்கை ஒப்பந்தம் ரத்து செய்யப்படவில்லை. இந்த விடயத்தில் இந்திய அரசு, இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும்.
தமிழக வரவு செலவுத்திட்டத்தில் இலங்கை பிரச்சினைக்கு மத்தி அரசு தீர்வு காண வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. இதற்காக நன்றி தெரிவித்து முதலமைச்சர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளோம்.
இதுவரை நாங்கள் பா.ம.க., ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களை சந்தித்து எங்களின் நிலை பற்றி விளக்கி இருக்கிறோம். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியையும் நாங்கள் சந்தித்து இருக்கிறோம். முதலமைச்சர் கருணாநிதி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆகியோரை சந்தித்து பேசுவதற்கு நேரம் கேட்டு இருக்கிறோம். அவர்கள் அனுமதி கொடுத்தால் கண்டிப்பாக நாங்கள் சந்தித்து பேசுவோம். கட்சி வேறுபாடுகளை கடந்து ஒருமித்த கருத்து உருவாக வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் இவ்வாறு அவர்கள் கூறினர். பேட்டியின் போது உலகத் தமிழ் பேரவை தலைவர் ஜனார்த்தனம் உடன் இருந்தார்.