* தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவிப்பு
கடந்த வாரம் மரணமடைந்த விஞ்ஞானியும் விஞ்ஞானப்புனை கதை எழுத்தாளருமான ஆர்தர் சி கிளார்க் மீதான சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளுக்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லையென இலங்கை அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருக்கிறது.
கடந்த சனிக்கிழமை ஆர்தர் சி கிளார்க்கின் இறுதிக் கிரியை இடம்பெற்றது. 1956 இலிருந்து அவர் இலங்கையில் வசித்து வந்தார்.
1998 இல் கிளார்க் மீது சிறுவர் பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டு தொடுக்கப்பட்டிருந்தது. இலங்கையில் இளம் பையன்களுடன் அவர் பாலியல் உறவு வைத்திருந்ததாகக் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருந்ததை அவரின் மரணம் தொடர்பான கட்டுரைகளை எழுதியிருந்தோர் குறிப்பிட்டிருந்தனர். ஆனால், அவருக்கு எதிராக எந்தவொரு வழக்கும் இல்லையென தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைத் தலைவர் ஜகத் வெள்ளவத்தை ஏ.எவ்.பி.க்கு தெரிவித்திருக்கிறார்.
`கிளார்க்கிற்கு எதிராக எந்தவொரு வழக்கும் இல்லை. அத்துடன் எவரும் அவரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கவில்லை' என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேசமயம், முறைப்படி எந்தவிதமான புகாரும் தெரிவிக்கப்படவில்லை. எவரும் சேர் ஆர்தரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறவுமில்லை என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் விசாரணையாளர் டபிள்யூ.ரி.டி.விஜயசேன கூறியுள்ளதுடன் வதந்திகளின் அடிப்படையில் நாம் விசாரணை செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுக்கும் ஜனாதிபதி செயலகப் பிரிவினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு முன்னின்று செயற்படும் அமைப்பான தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையானது கிளார்க்கின் நடத்தை தொடர்பாக இன்ரர்போலின் உதவியுடன் விசாரணையை ஆரம்பித்திருந்தது. 1998 இலிருந்து 2-1/2 வருடங்கள் கிளார்க்கின் வாக்குமூலத்தை பதிவு செய்வதில் பொலிஸார் நேரத்தை செலவிட்டனர். ஆயினும் அவருக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டுகளும் முன் கொண்டுவரப்படவில்லை. இந்தக் குற்றச்சாட்டுக்களை கடுமையாக எதிர்த்திருந்த கிளார்க் குற்றச்சாட்டை தெரிவித்திருந்த பிரிட்டிஷ் பத்திரிகைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப் போவதாக அச்சுறுத்தியிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டுக்களால் குழப்பமடைந்திருப்பதாகவும் தனக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காக நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்ட சதியெனவும் கிளார்க் கூறியிருந்தார்.
கிளார்க்கிற்கு `நைற் குட்' பட்டமளிப்பதற்காக இருந்த போதும் அது இரு வருடங்கள் அச்சமயம் பிற்போடப்பட்டது. அச்சமயம் இலங்கைக்கு பிரிட்டிஷ் இளவரசர் வருகை தந்திருந்தார். அப்போது கிளார்க்கிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அதிகளவுக்கு வெளிவந்தன.
கிளார்க்கின் மரணம் தொடர்பாக லண்டனிலிருந்து உத்தியோகபூர்வமாக அனுதாபச் செய்திகள் எவையும் வெளியிடப்படவில்லை. ஆனால், துயரமான நிகழ்வு என்று பிரிட்டிஷ் தூதரகத்தின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆர்தர் மீதான குற்றச்சாட்டுக்கள் வெளிவந்த சமயம் குரல் கொடுத்த சிறுவர் உரிமை அமைப்புகள் அவரின் மரணத்தையடுத்து அதிகளவு அமைதி காத்து வருகின்றன.
மரணமடைந்தோர் தொடர்பாக தீமையானவற்றை நாம் பேசுவதில்லையென்பது எமது கலாசார நடைமுறையென்று மாற்றுக் கொள்கை நிலையத்தின் பணிப்பாளர் சுனந்த தேசப்பிரிய தெரிவித்திருக்கிறார்.