பெய்ஜிங்: சீனாவில் திபெத்தியர்கள் வாழும் பகுதிகளில் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிசுவான் மாகாணத்தில் புதிதாக இடம்பெற்ற வன்முறைகளில் பொலிஸார் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதுடன் பலர் காயமடைந்திருப்பதாக அரச செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது இடம்பெற்ற வன்முறைகளில் 130 பேர் பலியானதாக நாடு கடந்து வாழும் திபெத்தியர்கள் தெரிவிக்கும் அதேவேளை இதில் 19 பேர் மட்டுமே கொல்லப்பட்டிருப்பதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரு எண்ணிக்கைகளும் சுயாதீன அமைப்புகளால் இதுவரை உறுதிப்படுத்தப்படாததுடன் திபெத்திற்குள் நுழைவதற்கு வெளிநாட்டு செய்தியாளர்களுக்கு தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சீனாவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்காக நேற்று முன் தினம் கிரேக்கத்தில் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றும் நிகழ்வு நடைபெற்றபோது திபெத்திற்கு சார்பான ஆர்ப்பாட்டக்காரர்கள் நிகழ்வுக்கு இடையூறு விளைவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சிசுவான் மாகாணத்தில் இடம்பெற்ற வன்முறைகளில் ஒரு பொலிஸார் பலியானதுடன் பலர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்படுவதுடன் இது தொடர்பான விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் இப்பகுதியில் முன்னர் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்றிய 381 பேர் தங்களிடம் சரணடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சீன மற்றும் திபெத்திய அதிகாரிகள் அங்கு நடைபெற்றுவரும் கலவரங்கள் தொடர்பில் ஒன்றுக்கொன்று வித்தியாசமான தகவல்களை வழங்கி வருவதுடன் ஒலிம்பிக் போட்டியை பகடைக் காயாக பயன்படுத்தி திபெத்தின் சுதந்திரத்திற்கான சலுகைகளைப் பெறுவதற்கு தலாய் லாமா முயற்சிப்பதாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.