இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பதவியேற்பு வைபவத்தில் பாகிஸ்தானின் புதிய பிரதமராக யூசுப் ரஸா கிலானி நேற்று பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
ஜனாதிபதி பேர்வேஷ் முஷாரப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு உத்தியோகபூர்வ ஜனாதிபதி வாசஸ்தலத்தில் நடைபெற்றது.
நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த கிலானி அவரை எதிர்த்து போட்டியிட்ட முஸ்லிம் லீக் (கியூ) கட்சி வேட்பாளர் சௌத்ரி பேர்வேஷ் இலாஹியை 222 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
342 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் கிலானி 264 வாக்குகளைப் பெற்றதுடன் சௌத்ரி பேர்வேஷ் இலாஹி 42 வாக்குகளை மட்டுமே பெற்றார்.
இதேவேளை, நேற்று முன்தினம் பிரதமராக தெரிவுசெய்யப்பட்ட பின்னர் கருத்துத் தெரிவித்த கிலானி, முஷாரப்பால் அவசரகாலச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள நீதிபதிகளை விடுதலை செய்வதற்கு உத்தரவிடவுள்ளதாகவும் பெனாசிரின் படுகொலை தொடர்பில் சர்வதேச விசாரணையைக் கோரவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
அண்மையில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியது. எனினும், ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இதையடுத்து, நவாஸ் ஷெரீப்பின் முஸ்லிம் லீக் (என்) கட்சி, அவாமி தேசிய கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்த பாகிஸ்தான் மக்கள் கட்சி பாராளுமன்ற தேசியப் பேரவையில் பெரும்பான்மை பலத்தைப் பெற்றது.
இதைத் தொடர்ந்து யூசுப் ரஸா கிலானி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
பெனாசிர் பூட்டோ பிரதமராக இருந்தபோது சபாநாயகராக, தலைவராக கிலானி இருந்தார். அடுத்து வந்த அரசு அவர் மீது ஊழல் குற்றம் சுமத்தி 4 ஆண்டுகள் சிறையில் அடைத்தது.
பூட்டோ குடும்பத்துக்கு விசுவாசமானவராகக் கருதப்படும் கிலானி, தற்போது கட்சியின் துணைத் தலைவராகவும் இருந்து வருகிறார்.
இதேவேளை, ஜனாதிபதி முஷாரப்புக்கு எதிரான அரசு பதவியேற்றிருப்பதால் அவரது நாட்கள் எண்ணப்படுவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் புதிய அரசுடன் இணைந்து செயல்படுவேன் என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் முஷாரப்.
பாகிஸ்தான் அரசியல் காட்சிகள் எப்படி மாறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள கிலானி, அடுத்த 5 ஆண்டுகளுக்கும் அதே பதவியில் நீடிப்பாரென பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவர் ஆஸிப்அலி சர்தாரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.