*மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை
அநுராதபுரம் மாவட்டத்தில் பெய்துவரும் கடுமையான மழையின் காரணமாக குளங்கள் பல வான் பாய ஆரம்பித்துள்ளன. மல்வத்து ஓயா பெருக்கெடுத்துள்ளதால் மல்வத்து ஓயாவை அண்மித்த பகுதிகளில் வெள்ள அபாயமும் ஏற்பட்டுள்ளது.
நாச்சியாதீவு குளத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் மல்வத்து ஓயா பெருக்கெடுக்க ஆரம்பித்துள்ளது. இதனால் சாலியபுர, பானியங்கடவல, பூவரசன்குளம் ஆகிய இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன. ராஜாங்கன நீர்த்தேக்கத்தின் ஆறு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. திறக்கப்பட்ட வான் கதவு ஒன்றிலிருந்து ஒரு செக்கனில் 4200 கன அடி நீர் பாய்வதாக நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் எம்.ஜீ.எம்.கலீல் தெரிவித்தார்.
கலாவாவியின் இரு கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து செக்கனுக்கு 11454 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாகவும் தற்போது கலாவாவியில் ஒரு இலட்சத்துப் பத்தாயிரம் ஏக்கர் தண்ணீர் இருப்பதாகவும் கலாவெவ பகுதிக்குப் பொறுப்பான நீர்ப்பாசன பொருளியலாளர் எம்.ஆர்.பண்டார தெரிவித்தார். கலாவாவியின் கொள்ளவை விட 3341 ஏக்கர் அடி நீர் மேலதிகமாக வந்து சேர்ந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நுவரெலியாவிற்கு கடந்த எட்டு வருடகாலத்தின் பின்னர் வான் பாயும் அளவுக்கு நீர் வந்து சேர்ந்துள்ளது. விலாச்சிகுளம், பசவக்குளம், திசாவாவி, மஹகனந்தர வாவி, ஹுருலுவாவி, பதவியாக்குளம் என்பனவும் வான்பாயும் நிலையில் உள்ளன.
ரஜரட்ட பகுதியில் எதிர்பாராத விதமாக பெய்துவரும் மழையின் காரணமாக நெல் அறுவடை முற்றாகப் பாதிப்படைந்துள்ளது. இதனால் நெல்லின் விலையும் வெகுவாகக் குறைந்துள்ளது.
அநுராதபுர மாவட்டத்தில் குளங்கள் வான் பாய ஆரம்பித்துள்ளதாலும் மல்வத்து ஓயா பெருக்கெடுக்க ஆரம்பித்துள்ளதாலும் குளங்களின் அருகே வசிப்பவர்களும் மல்வத்து ஓயாவை அண்மித்த பகுதிகளில் வசிப்பவர்களும் அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசன பொறியியலாளர் பொது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.