அண்மையில் பெய்த கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட 94,194 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக மீள்குடியேற்ற அநர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
அமைச்சின் நிவாரண உதவிகளைப் பெறவென பத்து மாவட்டங்களில் இருந்து 91,194 குடும்பங்களைச் சேர்ந்த 3,81,460 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி அம்பாறை மாவட்டத்தில் 43,846 குடும்பங்களைச் சேர்ந்த 198,218 பேரும் பதுளை மாவட்டத்தில் 385 குடும்பங்களைச் சேர்ந்த 1,622 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 33,465 குடும்பங்களைச் சேர்ந்த 130,614 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 2,036 குடும்பங்களைச் சேர்ந்த 7,781 பேரும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 72 குடும்பங்களைச் சேர்ந்த 301 பேரும் மன்னார் மாவட்டத்தில் 11,033 குடும்பங்களைச் சேர்ந்த 41,320 பேரும் மொனராகலை மாவட்டத்தில் 27 குடும்பங்களைச் சேர்ந்த 135 பேரும் புத்தளம் மாவட்டத்தில் 92 குடும்பங்களைச் சேர்ந்த 382 பேரும் இரத்தினபுரி மாவட்டத்தில் 26 குடும்பங்களைச் சேர்ந்த 92 பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 212 குடும்பங்களைச் சேர்ந்த 995 பேரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களாக இனங் காணப்பட்டுள்ளனர்.
ஆறு நலன்புரி நிலையங்கள் இதுவரை அமைக்கப்பட்டுள்ளன. இதில் 1,870 குடும்பங்கள் தங்கியிருக்கின்றன. ஹாலிஎல, ஏறாவூர் நகரம் மண்முனை தெற்கு போன்ற பிரதேசங்களிலேயே இந்த நலன்புரி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் எட்டுப் பேர் மரணித்தும் ஆறு பேர் காயமடைந்துமுள்ளனர். ஹப்புத்தளையில் ஒருவரும் பசறையில் இருவரும் திவுலப்பிட்டியில் மூன்று பேரும் பிபிலையில் இரண்டு பேரும் என எட்டுப்பேர் மரணித்துள்ளனர். பதுளையில் மூன்று பேரும் திவுலப்பிட்டியில் மூன்று பேரும் காயமடைந்துள்ளனர். மேலும், பதுளை மாவட்டத்தில் 14 வீடுகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 187 வீடுகளும் மொனராகலை மாவட்டத்தில் 19 வீடுகளும் இரத்தினபுரியில் எட்டு வீடுகளுமாக 228 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. பதுளை மாவட்டத்தில் 139 வீடுகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 410 வீடுகளும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 72 வீடுகளும் மொனராகலை மாவட்டத்தில் 7 வீடுகளும் இரத்தினபுரி மாவட்டத்தில் 9 வீடுகளுமாக 637 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சுமார் ரூபா 71 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்தந்த மாவட்ட அரச அதிபர்களுக்கு அவை அனுப்பப்பட்டுள்ளன.
இதற்கமைய, அம்பாறை மாவட்டத்திற்கு 650,000 ரூபாவும் பதுளை மாவட்டத்திற்கு 1,102,500 ரூபாவும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 837,692 ரூபாவும் கம்பஹா மாவட்டத்திற்கு 300,000 ரூபாவும் மொனராகலை மாவட்டத்திற்கு 1,170,950 ரூபாவும் புத்தளம் மாவட்டத்திற்கு 84,610 ரூபாவும் மன்னார் மாவட்டத்திற்கு 2,000,000 ரூபாவும் இரத்தினபுரி மாவட்டத்திற்கு 976,000 ரூபாவும் திருகோணமலை மாவட்டத்திற்கு 11,287 ரூபாவும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேலும் தெரிவித்தார்.