யாழ். பல்கலைக்கழக நுண்கலைப்பீட இசைத்துறை மாணவர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு கோரி, அந்த மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
மருதனார் மடத்திலுள்ள இராமநாதன் நுண்கலைத்துறை வளாகத்துக்கு முன்பாக நேற்று செவ்வாய்க்கிழமை காலை கூடிய இசைத்துறை மாணவர்களே இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என்றும் அந்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இப் போரட்டம் தொடர்பாக கலைப்பீட மாணவர் ஒன்றியம் கூறுகையில்;
கலைப்பீட நுண்கலைத்துறை மாணவர்களின், குறிப்பாக இசைத்துறை மாணவர்களின் விரிவுரைகளும் பயிற்சிகளும் இராமநாதன் கல்லூரியில் இயங்கியது யாவரும் அறிந்ததே. எனினும் எவ்விதமான வசதிகளும் வாய்ப்புகளும் அற்ற நிலையிலேயே அவர்கள் தமது பயிற்சிகளையும் விரிவுரைகளையும் பெற்று வருகின்றனர்.
இசைத்துறை மாணவர்களுக்கு விரிவுரைகள் நடத்தப்பட்டு வந்த கட்டடத் தொகுதிகள் அனைத்தும் நடனத்துறை மற்றும் சித்திரமும் வடிவமைப்பும் துறைகளுள் காணப்படுகின்றன.
இந்நிலைக்கு காரணமாக இருக்கும் யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தினுடைய அசமந்தப் போக்கை கண்டிக்கும் அதேநேரம், தமது கற்கை நெறிகளை பல்கலைக்கழக நிர்வாகப் பகுதிக்குள் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்குமாறு கோருகின்றோம். எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாது போனால் உரிமைப் போராட்டம் தொடரும் என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.