காசநோயால் உலகில் தினமும் 4 ஆயிரம் பேர் மரணமடைவதாகவும் இந்நோய்க்கு அடிப்படைக் காரணிகளுக்கு எதிரான போராட்டத்தை மேற்கொள்ளுமாறும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கி மூன் அழைப்பு விடுத்திருக்கிறார்.
காச நோய்க்கு ( Tuberculosis) அடிப்படைக் காரணங்களாக ஒழுங்கற்ற சேவைகள், சீரற்ற விநியோகம், உரிய மருந்துகள் தொடர்பாக உரிய முறையில் அறிவுறுத்தப்படாமை, மருந்துகளை உரிய முறையில் பயன்படுத்தாமை என்பவற்றை வகைப்படுத்தியிருக்கிறார் பான் கி மூன்.
சர்வதேச காச நோய் தினத்தை இவ்வருடத்தைய கருப் பொருள் காசநோயை நான் தடுத்து நிறுத்துகிறேன் என்பதாகும். இந்தச் செய்தியை நாம் பற்றிப் பிடித்து வருடம் முழுவதும் இந்த நோய்க்கு எதிரான போராட்டத்தை நடத்த வேண்டும் என் பான் கி மூன் கூறியுள்ளார்.
பல இலட்சக்கணக்கான தனிப்பட்ட கொடையாளிகள், ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள், சுகாதாரப் பராமரிப்பு பணியாளர்கள், நோயாளிகள், குடும்ப உறுப்பினர்கள் என யாவரும் அர்ப்பணிப்புணர்வுடன் ஒன்று பட்டு போராடுவதன் மூலம் இந்த நோய் பீடிக்கப்படாமல் வெற்றி கொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
யாவரும் ஒன்று பட்டு செயற்பட்டால் காச நோயால் பீடிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவடையும். ஆனால், சனத்தொகை வளர்ச்சிக்கேற்ப இந்த நோய் எதிர்ப்பு நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை. எச்.ஐ.வி.யிலும் பார்க்க இது மோசமானதாக ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்றும் பான் கி மூன் கூறியுள்ளார்.
காச நோயிலிருந்து உயிர்களைப் பாதுகாக்க உலகளாவிய ரீதியில் நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஐ.நா.செயலாளர் நாயகம் எதிர்வரும் ஜூன் மாதம் சர்வதேசத் தலைவர்கள் பங்கு பற்றும் எச்.ஐ.வி./ காச நோய் தொடர்பான மாநாட்டை ஐ.நா. நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.