* இஸ்ரேலில் பிரதமர் விக்கிரமநாயக்கா
ஜெருசலேம்:அல்ஹைதா , பி.கே.கே போன்ற சர்வதேச பயங்கரவாதக் குழுக்களுடன் விடுதலைப் புலிகள் தொடர்புகளைக் கொண்டிருப்பதாக குற்றம் சாட்டியிருக்கும் பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்கா இந்தியாவின் சில பகுதிகளையும் உள்ளடக்கி தமிழ் இராச்சியத்தை உருவாக்க விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் விரும்பியதாகவும் தமிழர்களுக்கு தனிநாடு உருவாவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை எனவும் கூறியுள்ளார்.
இஸ்ரேலுக்கு நான்குநாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்கா ஜெருசலேமில் இலங்கை நிலைவரம் பற்றி கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டதாக பி.ரி.ஐ. செய்திச்சேவை தெரிவித்தது.
பயங்கரவாதம் தொடர்பான சில நிபுணர்கள் பி.கே.கே, தலிபான், பிலிப்பைன்ஸிலுள்ள இஸ்லாமியக் குழுக்கள் மற்றும் அல்ஹைதாவுடன் விடுதலைப் புலிகள் தொடர்புகளைப் பேணி வருவதாக பயங்கரவாதம் தொடர்பான சில நிபுணர்கள் கூறியுள்ளனர்.
சிரியா மற்றும் லெபனானிலுள்ள பலஸ்தீன முகாம்களிலும் பலஸ்தீன இளைஞர்கள் பயிற்சி பெறுவதாக சில அறிக்கைகள் கிடைத்துள்ளன. தற்கொலைத் தாக்குதல்களுக்கு கரும்புலிகள் பொறுப்பாக இருந்து தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களையும் படுகொலைகளையும் செய்கின்றனர்.
சில பலஸ்தீனியக் குழுக்களிடமிருந்தே அவர்கள் இதனைக் கற்றுக் கொண்டதாக பொதுவாக நம்பப்படுகிறது என்றும் விக்கிரமநாயக்கா கூறியுள்ளார்.
இஸ்ரேலிய ஜனாதிபதி சிமொன் பெரஸ், பிரதமர் ஈகுட் ஒல்மேர்ட், பாதுகாப்பு அமைச்சர் ஈகுட் பராக், வெளிவிவகார அமைச்சர் ரிசிப்பிலிவினி ஆகியோருடன் பிரதமர் விக்கிரமநாயக்கா பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.
ஒல்மேர்ட்டுடனான சந்திப்பின் போது இலங்கை பயங்கரவாதத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அன்றாட வாழ்வையும் தேசிய பொருளாதாரத்தையும், பயங்கரவாதம் மோசமாக பாதித்துள்ளதாகவும் கூறியதாக இஸ்ரேலில் பிரதமர் அலுவலகம் விடுத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலும் இலங்கையும் பொதுவான தன்மையை அதிகளவுக்கு கொண்டிருப்பதாகவும் பயங்கரவாத தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நிலையில் இருநாடுகளும் இருப்பதாகவும் பிரதமர் விக்கிரமநாயக்கா கூறியுள்ளார்.
"தமிழ் இராச்சியத்தை இந்தியா அனுமதியாது"
இதேவேளை, இலங்கையில் தமிழர்களுக்கு தனியான சுதந்திர நாடொன்று உருவாக்கப்படுவதை இந்தியா ஒரு போதும் அனுமதியாது என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
இலங்கையில் தமிழர்களுக்கு தனியான நாடொன்று உருவாக்கப்படுவதற்கு இந்தியா ஒரு போதும் இடமளிக்காது என்பது மனதில் கொள்ள வேண்டிய விடயமாகும். ஏனெனில், அத்தகையதொரு நடவடிக்கையானது இந்தியாவிற்கும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்தியா எப்போதுமே இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாடு தொடர்பாக தீவிரமான ஈடுபாட்டுடன் உள்ளது. இந்தியாவின் குறிப்பிட்ட சில பகுதிகளையும் உள்ளடக்கி தனியான தமிழ் இராச்சியத்தை உருவாக்க பிரபாகரன் விரும்பியிருந்தார். இலங்கையில் மூன்று தசாப்தகால மோதலுக்கு அரசியல் தீர்வு காண்பதில் இலங்கை ஈடுபாட்டுடன் உள்ளது . அது இராணுவத்தீர்வை நாடவில்லை.
வரலாற்று பூர்வமாகவே இலங்கை ஒரே நாடாக இருந்து வருகிறது. அரசியல் ரீதியாகவோ பொருளாதார ரீதியாகவோ பிரிவினை என்பது சாத்தியமற்றதாகும் என்று விக்கிரமநாயக்கா கூறியுள்ளார்.
சமாதானப் பேச்சுவார்த்தைக்காக அரசாங்கத்தின் கதவுகள் எப்போதுமே திறந்திருப்பதாக கூறியிருக்கும் பிரதமர் அதேசமயம், தற்போதைய தலைவரின் கீழ் எந்தவொரு சந்தர்ப்பமும் இல்லை எனக் கூறியுள்ளார்.