இங்கிலாந்து - நியூஸிலாந்து அணிகளிடையே நேப்பியரில் நடைபெற்று வரும் 3 ஆ வதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற அதிக வாய்ப்புகளுள்ளது.
இன்று ஒரு நாள் மட்டுமே இருக்கையில் இந்தப் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றிபெறுவதாயின் மேலும் 331 ஓட்டங்களைப்பெற வேண்டும்.
எனினும், நியூஸிலாந்து அணியின் வசம் ஐந்து விக்கெட்டுகளே இருப்பதால் இது சாத்தியப்படுவது மிகவும் கடினமாகும்.
இந்த டெஸ்டில் முதல் இனிங்ஸில் 253 ஓட்டங்களைப் பெற்ற இங்கிலாந்து அணி, தனது 2 ஆவது இனிங்ஸில் 3 ஆம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 416 ஒட்டங்களைப் பெற்றிருந்தது.
இதில் அன்றூ ஸ்ட்ராஸ் 173 ஓட்டங்ளைப் பெற்ற நிலையில் ஆட்டமிழக்காதிருந்தார்.
நேற்று 4 ஆம் நாள் ஆட்டம் தொடர்ந்த போது ஸ்ட்ராஸ் 177 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். இவரையடுத்து அம்புறோஸ் 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இந்த நிலையில், இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 467 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது,தனது 2 ஆவது இனிங்ஸை நிறுத்திக் கொண்டது.
முதல் இனிங்ஸில் 168 ஓட்டங்களையே பெற்ற நியூஸிலாந்து அணி இந்தப் போட்டியில் வெற்றிபெறுவதாயின் 553 ஓட்டங்களை இரண்டாவது இனிங்ஸில் பெற வேண்டும் என்ற மிகப் பெரும் இலக்குடன் களமிறங்கியது.
எனினும் நேற்றைய 4 ஆம் நாள் ஆட்டம் முடிவடையும் போது நியூஸிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 222 ஓட்டங்களையே பெற்றது.
இதில்,முதல் இனிங்ஸில் அரைச் சதமடித்த ஸ்ரீபன் பிளமிங் மிகச்சிறப்பாக ஆடி 66 ஓட்டங்களைப் பெற்றார்.இந்தப் போட்டியுடன் அவர் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதால்,2 ஆவது இனிங்ஸிலும் அரைச்சதமடித்த அவருக்கு ரசிகர்கள் எழுந்து நின்று தங்கள் பாராட்டை தெரிவித்தனர்.
பெல் 69 ஓட்டங்ளையும் ரெயிலர் ஆட்டமிழக்காது 34 ஓட்டங்களையும் மக்குலம் ஆட்டமிழக்காது 24 ஓட்டங்களையும் பெற்றனர்.
மொன்ரி பனேசர் - 3 ,புரோட் - 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இந்தப் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி பெறுவதாயின் மேலும் 331 ஓட்டங்களை இன்றைய கடைசிநாளில் பெறவேண்டும். இது சாத்தியமாகும் வாய்ப்புகள் குறைவேயென்பதால் இங்கிலாந்துக்கு வெற்றி வாய்ப்புள்ளது.