வார்த்தைப் போருக்கும் ஆக்ரோஷமாக விளையாடுவதற்கும் உள்ள வித்தியாசத்தை அறிவோம். ஒரு போதும் எல்லை மீறமாட்டோம் என தென் ஆபிரிக்க விக்கெட் காப்பாளர் மார்க் பவுச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள தென் ஆபிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் இன்று சென்னையில் தொடங்குகிறது. முன்னதாக நடந்த அவுஸ்திரேலிய தொடரில் வீரர்களிடையே நடந்த வார்த்தை போர் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இது போன்ற வார்த்தைப் போர் உருவாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது கப்டனின் பொறுப்பென அனைத்து கிரிக்கெட் சபைகளுக்கும் சமீபத்தில் ஐ.சி.சி. கடிதம் அனுப்பியது. இதனால் தென்ஆபிரிக்க டெஸ்ட் தொடரில் வீரர்கள் அடக்கி வாசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து பவுச்சர் அளித்த பேட்டியில்;
தென்ஆபிரிக்க வீரர்களுக்கு மைதானத்தில் என்ன செய்ய வேண்டும்... என்ன செய்யக் கூடாது என்பது நன்றாகத் தெரியும். எங்கள் வீரர்களிடம் போதிய முதிர்ச்சியிருக்கிறது. முதல் போட்டி தொடங்க ஒரு நாள் மட்டுமே உள்ளது. இன்னும் எந்த சர்ச்சைகளும் எழவில்லை. தொடர் முழுவதும் இது தொடரும்.
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கென்று தனிச்சிறப்புள்ளது. இதில் சூழ்நிலைக்கு ஏற்ப தாக்குதல் பாணியிலேயோ அல்லது தற்காப்பு ஆட்டமோ விளையாட வேண்டியது அவசியம். இதனால் இரண்டுமே கலந்து விளையாடத் தெரிந்திருப்பது அதிக பலம்.
சென்னையில் வெயில் அதிகமாக இருக்குமெனத் தெரியும். அதிஷ்டவசமாக தற்போது சென்னையில் வானிலை அதிக ஈரப்பதத்துடன் இருக்கிறது. சமீபத்தில் பங்களாதேஷில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதால் இங்குள்ள சூழ்நிலைக்கு எளிதில் தயார்படுத்திகொள்ள முடியும். இந்தியாவில் பல முறை விளையாடியிருக்கிறோம். இதனால் மைதானங்களை ஓரளவு புரிந்து வைத்திருக்கிறோம்.
இந்திய அணியின் பயிற்சியாளராக தென்ஆபிரிக்கர் ஒருவர் இருப்பது எங்களுக்கு எந்த பிரச்சினையும் தராது. இவர் இந்திய அணிக்கு என்ன ரிப்ஸ் வழங்குகிறார் என்பது பற்றி கவலையில்லையென்றும் பவுச்சர் தெரிவித்தார்.
இத்தொடரில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என தென்ஆபிரிக்க வீரர் ஹாசிம் அம்லா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
இந்திய ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு அதிகம் கைகொடுக்கும். இதனால் சுழற்பந்தை சமாளிக்க தேவையான பயிற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.