இலங்கை அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய அணி தோல்வியை நோக்கிச் செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது.
துடுப்பாட்டத்தில் நன்கு பிரகாசித்த இலங்கை அணி பந்து வீச்சிலும் மேற்கிந்திய அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது.
கயானாவில் நடைபெறும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இனிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 476 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடும் மேற்கிந்திய அணி 2 ஆம் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 29 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
தொடர்ந்து 3 ஆம் நாள் களமிறங்கிய மேற்கிந்திய துடுப்பாட்ட வீரர்களால் இலங்கையின் பந்து வீச்சாளர்களுக்கு முகம்கொடுக்க முடியவில்லை. அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்து கொண்டிருந்தன.
விக்கெட் வீழ்ச்சியை ஒரு முனையில் நின்று தடுத்து நிறுத்த சர்வான் முயன்று கொண்டிருந்த போதும் மறு முனையில் விக்கெட்டுகள் சரிந்து கொண்டேயிருந்தன.
மதிய உணவு இடைவேளையின் போது 4 விக்கெட் இழப்புக்கு 107 ஓட்டங்கள் பெறப்பட்ட நிலையில் தொடர்ந்தும் விக்கெட்டுகள் வீழ்வதை மேற்கிந்திய துடுப்பாட்ட வீரர்களால் தடுக்க முடியவில்லை.
சர்வான் மட்டுமே அரைச்சதமடித்தார். ஏனைய வீரர்களால் 40க்கும் குறைவான ஓட்டங்களையே பெற முடிந்தது.
3 ஆம் நாளில் ஸ்மித்- 14, சாமுவேல்ஸ்-5, சந்தர்போல்- 23, பிராவோ- 8, சர்வான்- 80, ஹிண்ட்ஸ்- 37, ராம்டீன்- 38, பென்-28 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
சர்வானின் நீண்ட நேர ஆட்டத்தில் மேற்கிந்திய அணியால் 250 ஓட்டங்களைத் தாண்ட முடிந்தது. எனினும், சமிந்தவாஸ், முரளிதரன், மிராண்டோ ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சுக்கு முன்னால் மேற்கிந்திய வீரர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
3 ஆம் ஆட்ட முடிவில் மேற்கிந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 269 ஓட்டங்களைப் பெற்று இலங்கை அணியை விட 207 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையிலிருந்தது.
பந்து வீச்சில் சமிந்தவாஸ்- 3, முரளிதரன்- 3, மிராண்டா- 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.