காத்மண்டு: நேபாள இராணுவத்திற்கு இந்தியாவிலிருந்து ஆயுதம் கொள்வனவு செய்வதாக குற்றஞ்சாட்டி தலைநகர் காத்மண்டுவில் மாவோயிஸ்ட்டுகள் வீதிமறியல் போராட்டம் நடத்தினர்.
முன்னதாக, நேபாள ஆயுதப்படை பொலிஸார் 2 லொறிகளில் எடுத்துச்சென்ற ஆயுதங்களை தாங்கள் பறிமுதல் செய்ததாக மாவோயிஸ்டுகள் தெரிவித்தனர். தேர்தல் நடைபெறும் வேளையில் மாவோயிஸ்ட்டுகளை ஒடுக்கவே இத்தகைய ஆயுதக் கொள்முதலை அரசு தொடங்கியுள்ளதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
பெருமளவு ஆயுதங்களை இந்தியாவில் இருந்து கொள்முதல் செய்ய நேபாள அரசு திட்டமிட்டுள்ளது. இதை நாங்கள் தடுப்போம் என மாவோயிஸ்ட்டுகள் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய ஆயுதக் கொள்முதலைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படுமெனவும் அறிவித்திருந்தனர்.
அதன்படி, கடந்த செவ்வாய்க்கிழமை காத்மண்டு நகரின் அனைத்து வீதிகளையும் மாவோயிஸ்ட்டுகள் மறித்தனர். இதனால், 1 மணி நேரம் போக்குவரத்தும் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.
இதேவேளையில், ஆயுதம் வைத்திருந்ததாக மாவோயிஸ்ட் முக்கிய நிர்வாகிகள் 3 பேர் ரோல்பா மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நேபாளத்தில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெறுவதையொட்டி பொலிஸாரும் , இராணுவத்தினரும் தீவிரமான சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.