*முஷாரப், கிலானி கூட்டாக தெரிவிப்பு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் எதிர்நோக்கியுள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கவும் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் இருவரும் இணைந்து பணியாற்றவுள்ளதாக ஜனாதிபதி பெர்வேஷ் முஷாரப்பும் பிரதமர் யூசுப் ரஸா கிலானியும் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.
புதிய பிரதமராக பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த யூசுப் ரஸா கிலானி நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி முஷாரப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இந்நிகழ்ச்சிக்குப் பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
நாட்டின் பாராளுமன்றத்தின் அதிகாரத்தை வலிமைப்படுத்தவும், நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை சமாளிக்கவும், ஜனாதிபதி முஷாரப்புடன் இணைந்து பணியாற்ற உள்ளேன்.
பாராளுமன்றம் என்பது ஜனாதிபதி, தேசிய சபை மற்றும் அதன் உறுப்பினர்களை உள்ளடக்கியது. அதனால், இந்த மூன்றும் ஒருங்கிணைந்து செயற்பட்டால் தான் நாட்டின் பிரச்சினைகள் தீர்க்க இயலும். முன்னதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தலைமை நீதிபதி இஃப்திகர் சௌத்ரி உள்ளிட்ட அனைத்து நீதிபதிகளும் விரைவில் விடுவிக்கப்படுவர். அதற்கான உத்தரவில் விரைவில் கையெழுத்திடுவேன் எனத் தெரிவித்தார்.
இதேவேளை, கிலானிக்கு அனைத்து வகையிலும் ஆதரவு தெரிவிப்பேன். இருவரும் இணைந்து நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க உள்ளோம். பிரதமர் என்ற இந்த மிகப்பெரிய சவால் நிறைந்த பதவியில் அவர் அமர்ந்துள்ளதால் அவருக்கு எப்போதும் என் ஆதரவு உண்டு.
குறிப்பாக நாட்டின் முன்னேற்றம், வளர்ச்சித் திட்டங்கள், பொருளாதார சிக்கல்களை தீர்த்தல், தீவிரவாதத்தை ஒழித்தல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து பணியாற்றுவோம்.
தற்போது, முடிந்துள்ள பொதுத் தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவம் நடந்து முடிந்தது நமக்கு பெருமை தரும் விஷயம். இந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் அமோக ஆதரவில் பிரதமராகி உள்ள கிலானிக்கு எனது வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார்.