கல்கத்தா: கடல்மட்ட அதிகரிப்பு மற்றும் குடிநீர் பற்றாக்குறை என்பவற்றால் இந்திய, பங்களாதேஷ் கரையோரங்களிலுள்ள சுமார் 125 மில்லியன் மக்கள் இந் நூற்றாண்டுக்குள் இடம் பெயர நேரிடுமென சூழலியல் அமைப்பொன்று எச்சரித்துள்ளது.
மேலும், காலநிலை மாற்றம் பருவமழைக் காலங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன் விவசாய நடவடிக்கைகளையும் பாதிக்குமென தெற்காசியாவில் நிகழும் துரித வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பாக ஆய்வொன்றை மேற்கொண்ட உலக சூழலியல் அமைப்பான கிறீன் பீஸ் தெரிவித்துள்ளது.
அத்துடன் அண்மைய ஆண்டுகளில் 8 அல்லது 9 வீத பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ள இந்தியா, சூழலை அதிகளவு மாசுபடுத்தும் நாடுகளில் ஒன்றாக விளங்குவதுடன், அதன் எரிபொருள் நுகர்வு அதிகரித்திருப்பதன் விளைவாக 4 வீத பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்திற்கு காரணமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தால் உருவாகப் போகும் ஆபத்துகளுக்காக காத்திராமல் அதனை ஈடுசெய்யக் கூடிய நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ள இச் சூழலியல் அமைப்பின் நடவடிக்கையாளரொருவர், காலநிலை மாற்றத்தால் ஏற்படப்போகும் பேராபத்துகளை குறைப்பதற்கான கொள்கைகளை உருவாக்க வேண்டிய தேவை எமக்கிருப்பதுடன், பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தை குறைப்பதனூடாக பொருளாதார அபிவிருத்திக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஐ.நா.வின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தால் புதிதாக வெளியிடப்பட்ட அறிக்கையொன்றும் காலநிலை மாற்றம் உலகின் ஏழ்மையான நாடுகளை மிக மோசமாக பாதிக்கும் என எச்சரித்துள்ளதுடன், நோய்கள் பரவும் அபாயத்தையும் பாரம் பரிய வாழ்க்கை முறையில் மாற்றத்தையும் ஏற்படுத்துவதுடன், பாரிய இடப்பெயர்வுக்கும் வழிவகுக்குமெனத் தெரிவித்துள்ளது.
இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் கரையோரங்களில் கடல் மட்டத்திலிருந்து 10 மீற்றருக்கும் குறைவான தூரத்தில் 130 மில்லின், மக்கள் வாழ்வதாக கிறீன்பீஸின் அறிக்கை தெரிவித்துள்ளது.
இதேவேளை, காலநிலை மாற்றத்தால் உலகம் பூராகவும் 2050 இற்குள் ஒரு பில்லியன் மக்கள் இடம்பெயர்வார்களென கிறிஸ்தவ உதவி அமைப்பொன்று தெரிவித்துள்ளது.
இந்தியா, பங்களாதேஷ், மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் மொத்த சனத்தொகை ஏறத்தாழ 1.4 பில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது.