*இலஞ்ச மோசடி திணைக்கள ஆணையாளர் தெரிவிப்பு
இலஞ்ச மற்றும் ஊழல் மோசடிகளில் அதிகமாக தொடர்புபடுபவர்களாக பொலிஸ் அதிகாரிகளும், கிராம அதிகாரிகளுமே காணப்படுகின்றனர். கடந்த வருடம் 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதுடன், இவ்வருட ஆரம்பத்தில் 28 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலஞ்ச, ஊழல் மோசடி திணைக்களத்தின் ஆணையாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நெவில் குருகே தெரிவித்துள்ளார்.
கெக்கிராவவில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும், அவர் பேசுகையில் கூறியதாவது;
இலஞ்சம் பெறுபவர்களுக்கு பலவிதமான நோய்கள் ஏற்பட்டுள்ளதை காணுகின்றேன். சிலர் இலஞ்சம் கொடுக்க தங்க மோதிரங்களை அடகு வைக்கின்றனர். சிலர் எம்மிடம் வந்து இலஞ்சம் பெறுகின்றவர்களை முட்டுக்காலில் நிற்க வைக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
இலஞ்சம் பெறுகின்ற போது, அகப்பட்டார்கள் எனில் உயர்ந்த பட்ச தண்டனையாக 07 வருட சிறைவாசம் அனுபவிக்க நேரிடும், கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டால் எவரும் உதவிசெய்ய மாட்டார்கள்.
பொலிஸ் திணைக்களத்தினால் பொலிஸ் அதிகாரிகளுக்கு வழிகாட்டும் வகையில் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், அதை அவர்கள் வாசிப்பதில்லை. மக்களுடைய பணத்தையே நாம் சம்பளமாக பெறுகின்றோம். அவர்கள் எம்மை நாடி வருகின்ற போது, மிகவும் உயர்திருப்தியுடன் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும்.