முல்லைத்தீவு பகுதியிலிருந்து தமிழகத்திற்கு அகதிகளாகச் சென்ற 11 பேர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை கச்சதீவு கடற்பகுதியில் வைத்து இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனினும், படகொன்றில் காரைநகர் கடற்பரப்பில் சென்று கொண்டிருந்தவர்களையே செவ்வாய்க்கிழமை அதிகாலை தாங்கள் கைது செய்ததாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தப் 11 பேரையும் கடற்படையினர் நேற்று புதன்கிழமை காலை ஊர்காவற்றுறை மாவட்ட நீதிபதி ஜோய் மகாதேவா முன்னிலையில் ஆஜர் செய்தனர்.
முல்லைத்தீவு விசுவமடு பகுதியிலிருந்து படகொன்றில் வந்த இவர்களைத் தாங்கள் காரைநகர் கடற்பரப்பில் வைத்து கைது செய்ததாக கடற்படையினர் நீதிபதியிடம் தெரிவித்தனர்.
எனினும், முல்லைத்தீவிலிருந்து படகொன்றில் இந்தியா சென்ற தங்களை கச்சதீவு கடற்பரப்பில் வைத்து இலங்கைக் கடற்படையினர் கைது செய்து இங்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளதாகத் தெரிவித்த அவர்கள், தங்களை விடுதலை செய்யுமாறும் நாட்டை விட்டு வெளியேறி இந்தியா செல்ல அனுமதிக்குமாறும் நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.
எனினும், அதனை ஏற்க மறுத்த நீதிபதி அனைவரையும் எதிர் வரும் 9 ஆம் திகதி (ஏப்ரல்) வரை யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டார்.
ஐந்து மாதக் குழந்தை, இளம் தாய், பெண்ணொருவர் உட்பட இந்தப் 11 பேரும் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்களென தெரிவிக்கப்படுகிறது.