*13 ஆவது திருத்தத்தை ரத்துச்செய்யவேண்டும் - விமல்வீரவன்ச
டிட்டோ குகன்
13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை இரத்து செய்யவேண்டுமென ஜே.வி.பி.யின் பாராளுமன்றக் குழுத் தலைவரும், தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
அத்துடன், சேர்பியாவிலிருந்து கொசோவோ பிரிந்து செல்வதற்கு முன்னர் அதை அண்மித்த காலங்களில் கொசோவோவில் இருந்த நிலைமையே இன்று இலங்கையிலும் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.
கொழும்பு தேசிய நூலக, ஆவணங்கள் சபை கேட்போர் கூடத்தில் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் சார்பில் நேற்று புதன் கிழமை நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே விமல் வீரவன்ச எம்.பி.மேற்கண்டவாறு கூறினார்.
அவர் இங்கு மேலும் பேசுகையில்;
13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் என்பது இந்தியாவினால் அன்றைய ஜே.ஆர்.அரசாங்கத்தின் மீது பலவந்தமாக திணிக்கப்பட்டதொன்றாகும். அன்று ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. ஆனால், அதையே இன்று முற்று முழுதாக அமுல்படுத்தப் போவதாக அரசாங்கம் கூறுகிறது.
எனவே, 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவதை விடுத்து, அதை ரத்துச் செய்வதற்கு ஜனாதிபதி உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென நாம் வலியுறுத்துகிறோம்.
ஏனெனில், குறித்தவொரு பிரதேசத்திற்கும், குறித்தவொரு இனக் குழுமத்திற்கும் அதிகாரத்தை பகிர்வதற்கு மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வாக்களிக்கவில்லை. மக்கள் மத்தியில் அதிகாரம் பகிரப்படவேண்டுமென்பதற்காகவே அவருக்கு மக்கள் ஆணை கிடைத்தது. எனவே, அரசாங்கம் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும்.
நிலைமை இவ்வாறிருக்க, இந்தியா இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி இலங்கையின் பொருளாதார வளங்களை ஆக்கிரமிக்கப் பார்க்கிறது. இலங்கைப் பிரச்சினையில் இந்தியா இரட்டை வேடம் போடுகிறது. ஒரு புறம் சமாதானப் பேச்சுகள் மூலம் தான் இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டுமெனத் தெரிவிக்கும் இந்தியா, மறுபுறம் இராணுவத் தளபதியை அழைத்து உபசரித்து, படை நடவடிக்கைளுக்குத் தாங்கள் ஆதரவு என்பது போன்ற சமிக்ஞையும் காட்டியுள்ளது.
இவற்றின் மூலம் இந்தியா, இலங்கையில் பொருளாதார இலாபம் பெறப்பார்க்கிறது. யுத்தத்துக்கு தரும் ஒத்துழைப்புகளுக்கான கப்பமாக இந்தியா, இலங்கையில் பொருளாதார இலாபம் சம்பாதிக்க முயற்சிக்கிறது.
இப்போதே எண்ணெய் வளம், மின் உற்பத்தி என்பன இந்தியாவின் கைகளுக்குப் போய்க்கொண்டிருக்கின்றன. புலிகளை முற்றாக தோற்கடிக்கும்போது, இலங்கையின் பொருளாதாரம் முழுவதும் இந்தியாவின் கையில் இருக்குமாயின், புலிகளைத் தோற்கடித்து நாட்டை இந்தியாவிற்கு தாரை வார்த்தது போலாகிவிடும்.
எனவே, இந்தியாவின் கபடத்தனம் குறித்து, அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும். யுத்தத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கான கப்பமாக பொருளாதார கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைக் கைப்பற்ற இந்தியாவிற்கு இடமளிக்கக் கூடாது.
இதேநேரம், கிழக்கில் மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பயங்கரவாதத்திலிருந்து மீட்டதன் பின்னர் கிழக்கிலென்றாலும், வடக்கிலென்றாலும் தேர்தல் நடத்துவதென்றால் அங்கு குடிசன மதிப்பீடு நடத்தியிருக்க வேண்டும்.
1981 ஆம் ஆண்டின் பின்னர் சரியான குடிசன மதிப்பீடு இன்னும் நடத்தப்படவில்லை. எனவே, தற்போதுள்ள வாக்காளர் பட்டியலை சரியானதென ஏற்க முடியாது. குடிசன மதிப்பீடு நடத்தாமல் தேர்தலை நடத்துவது என்பது பிரதான குறைபாடகும். ஏனெனில் அப்போதைய வாக்காளர்களின் எண்ணிக்கைக்கும் தற்போது இருப்பவர்களுக்கும் இடையில் பாரிய இடைவெளி இருக்கிறது. குடிசன மதிப்பீடு நடத்தாதது குறித்து நாம் அரசுக்கு சுட்டிக் காட்டுகிறோம். இது சுயலாபம் பெறும் நோக்கமாக இருக்கலாமென்ற சந்தேகத்தைத் தூண்டுகிறது.
இதேவேளை, அரசிடம் நிலையான வெளியுறவுக் கொள்கை இருப்பதாகப் தெரியவில்லை. ஒருபுறம் ஜனாதிபதி ஈரானுக்கு விஜயம் செய்யும் அதேநேரம், மறுபுறம் பிரதமர் இஸ்ரேல் செல்கிறார். இது பிரச்சினைக்குரிய விடயம். பல்வேறுபட்ட சக்திகளையும் திருப்திப்படுத்தச் சென்று இறுதியில் எங்கிருந்தும் உதவிகள் கிடைக்காமல் போகக்கூடிய நிலைமை ஏற்படப் போகிறது.
கொசோவோ தனி நாடாகப் பிரிந்து செல்வதற்கு முன்னர் அதற்கு அண்மைய காலங்களில் அங்கிருந்தது போன்ற நிலைமையே தற்போது இங்கும் நிலவுகிறது. மனித உரிமை விவகாரங்களுக்கான ஐ.நா.உயர் ஸ்தானிகரான லூயிஸ் ஆர்பரின் அறிக்கையினால் தான் கொசோவோ பிரிந்து சென்றது. இதைப் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, நாட்டுக்குப் பயனுள்ள வகையில் வெளியுறவுக் கொள்ளையைக் கடைப்பிடிக்குமாறு அரசை வலியுறுத்துகிறோம் என்றார்.
இதேநேரம், 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை அமுல்படுத்துவதன் மூலம் பொலிஸ், நீதிமன்றம் போன்ற அதிகாரங்கள் வழங்கப்படுமெனில் அது தனித் தமிழீழத்துக்கு வழிவகுப்பதாக அமையுமென தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவரான கலாநிதி குணதாச சமரசேகர தெரிவித்தார்.