*இறுதிமுடிவு இன்னமும் இல்லை
எம்.ஏ.எம். நிலாம்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் புரிந்துணர்வு அடிப்படையில் போட்டியிடுவது தொடர்பாக ஐக்கிய தேசியக்கட்சியும் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் நேற்று புதன் கிழமை நீண்டநேரம் விரிவாக கலந்துரையாடியுள்ளன.
இத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் எந்தவொரு கட்சியுடனும் இணையாது தனித்துப் போட்டியிடுவது என்ற கட்சியின் தீர்மானத்துக்கமைய ஐக்கிய தேசியக்கட்சியுடன் புரிந்துணர்வுடன் செயற்படுவது தொடர்பாக நேற்றைய சந்திப்பில் ஆராயப்பட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ரி. ஹஸன் அலியும், தவிசாளர் பஷீர் சேகுதாவூதும் தெரிவித்தனர்.
நேற்றுக்காலை 9.30 மணிக்கு எதிர்க்கட்சித் தலைவரின் கேம்ப்ரிட்ஜ் ரெரஸ் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
ஐக்கிய தேசியக்கட்சி தரப்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கட்சியின் தவிசாளர் ருக்மன் சேனநாயக்கா, பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா, எதிர்க்கட்சி பிரதம கொரடா ஜோசப் மைக்கல் பெரேரா ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் பொதுச் செயலாளர் எம்.ரி. ஹஸன் அலி, தவிசாளர் பஷீர் சேகுதாவூத், சட்டத்தரணி பாயிஸ் ஆகியோர் இடம்பெற்றனர். இக்கலந்துரையாடல் சுமார் இரண்டரை மணிநேரம் நீடித்ததாக ஐக்கிய தேசியக்கட்சிப் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா தெரிவித்தார்.
ஆரம்பத்தில் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் எந்தளவுக்கு நேர்மையாகவும், நியாயமாகவும் இடம்பெறலாமென ஆராயப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் கிழக்கில் ஆயுதக் குழுக்கள் நிராயுத பாணிகளாக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்விடயத்தில் ஜே.வி.பி. உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டிலிருப்பதையும் இரு தரப்பினரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன், தேர்தலை அவதானிப்பதற்காக சர்வதேச கண்காணிப்புக்குழுவை ஈடுபடுத்த வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கிழக்கிலிருந்து திடீரென விஷேட அதிரடிப்படையினர் அப்புறப்படுத்தப்படுவதில் பலத்த சந்தேகம் தோற்றுவிக்கப்பட்டிருப்பதாகவும், தேர்தல் முடிவுறும் வரை விஷேட அதிரடிப்படை அங்கு நிலைகொள்ளச் செய்யப்பட வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளதோடு திருகோணமலை உட்பட கிழக்கில் பொலிஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்வது இடைநிறுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கைகளை அனைத்து எதிர்க்கட்சிகளும் கூட்டாக தேர்தல் ஆணையாளரிடமும் அரசாங்கத்திடமும் வலியுறுத்துவதென இணக்கம் காணப்பட்டுள்ளது.
அத்துடன், மாகாண சபைத் தேர்தல் நீதியாகவும், நேர்மையாகவும் நடத்தப்படுவதை உறுதிசெய்யுமாறு தேர்தல் ஆணையாளரிடம் கோருவதெனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இந்தத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக இரு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இத்தேர்தலில் எந்தவொரு கட்சியுடனும் இணைந்து போட்டியிடுவதில்லை என்றும் கட்சியின் தனித்துவத்தை பாதுகாக்கும் பொருட்டு கிழக்கில் அது தனித்தே போட்டியிடத் தீர்மானித்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியிடம் எடுத்துக் கூறியதாக பொதுச் செயலாளர் எம்.ரி. ஹஸன் அலி தெரிவித்தார்.
அதேசமயம், இத்தேர்தல் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் புரிந்துணர்வு அடிப்படையில் செயற்படுவது குறித்து ஆராய்வதற்கு கட்சி இணக்கம் தெரிவித்ததாக மு.கா. தவிசாளர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
இத்தேர்தலில் எக்காரணம் கொண்டும் அரச தரப்புடன் கூட்டுச் சேர்வதில்லை என்று கட்சி ஏற்கனவே தீர்மானித்துவிட்டதாகவும் பஷீர் சேகுதாவூத் குறிப்பிட்டார்.
இரு கட்சிகளுக்குமிடையிலான புரிந்துணர்வு இணக்கப்பாடு குறித்து முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடம் கூடித் தீர்மானிக்கவிருப்பதாக செயலாளர் ஹஸன் அலி தெரிவித்தார். இந்த உயர்பீடக் கூட்டம் நேற்று புதன்கிழமை இரவு கூடுவதற்கான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இருதரப்பினரும் மீண்டும் சந்தித்துப் பேசுவதெனவும் அன்று இந்த இணக்கப்பாடு குறித்து அறிவிப்பதெனவும் இரு கட்சிகளும் தீர்மானித்துள்ளன.
இதேவேளை, முஸ்லிம் காங்கிரஸை இணைத்துக் கொண்டு மாகாணசபைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் பாராளுமன்றத்திலுள்ள முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து தீவிரமுயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும், முஸ்லிம் காங்கிரஸ் சின்னமான மரச்சின்னத்தை விட்டுக் கொடுக்க அக்கட்சி தயாராக இல்லை என தலைவர் ரவூப் ஹக்கிம் உறுதியான நிலைப்பாட்டிலிருக்கின்றார்.
ஆளும் தரப்பிலுள்ள முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் அரசிலிருந்து வெளியேறி முஸ்லிம் கூட்டமைப்பொன்றை ஏற்படுத்த முன்வருவார்களானால் அதற்குத் தாம் தயாராகவிருப்பதாகவும் அதற்குச் சில நிபந்தனைகளை முன்வைத்திருப்பதாகவும் கட்சிவட்டாரம் தெரிவித்துள்ளது.