அண்மைக் காலமாகக் கனடாவில் புலிகள் இயக்கத்தினரதும் அவர்களுடைய ஆதரவாளர்கள் மற்றும் புலிகள் இயக்கத்துக்காக நிதிசேகரிப்பு, ஆயுதங்கள் கொள்முதல், பிரசார நடவடிக்கைகள் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவோர் உட்பட புலிகள் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் பற்றி கனடா பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸ் அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்தவகையில் விஷேட விசாரணைகள், தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் கனடா பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் இவ்வாறு ஷ்ரீ லங்காவில் இயங்கிவரும் புலிகள் இயக்கத்துக்காக மில்லியன் கணக்கான டொலர் பணத் தொகையை சேகரித்தவராகிய தம்பித்துரை பிரபாகரன் எனப்படும் யாழ்ப்பாணத் தமிழரைக் கைது செய்துள்ளனர். இவர் கனடிய குடியுரிமை பெற்று ஒன்ராறியோ பிரதேசத்தில் வாழ்ந்து வருபவர் எனவும் தெரியவந்துள்ளது.
மேற்படி தம்பிராஜா பிரபாகரன் இவ்வாறு நெடுங்காலமாகப் புலிகள் இயக்கத்துக்காக நிதிசேகரிப்பதில் ஈடுபட்டுவருவது பற்றித் தகவல்கள் தெரிய வந்துள்ளதைத் தொடர்ந்து கனடா பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் குறித்த ஒன்ராறியோ பிரதேசத்தில் விஷேட தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு இவரைக் கைது செய்துள்ளனர். பின்னர் இவரிடம் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின போது அவர் பயங்கரவாத புலிகள் இயக்கத்துக்காக இலட்சக்கணக்கான டொலர்கள் நிதிசேகரித்திருப்பது பற்றிய பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைத் தொடர்ந்து கடந்த 19 ஆம் திகதி புதன் கிழமை மேற்படி தம்பிராஜா பிரபாகரனை கனடா வான்கூவர் பிராந்திய நீதிமன்றத்தில் பயங்கரவாதத் தடுப்பு அதிகாரிகள் ஆஜர் செய்து பயங்கரவாத புலிகள் இயக்கத்துக்காக நிதிசேகரித்தது உட்பட பல குற்றச்சாட்டுகளின் பேரில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
இது பற்றி கனடா பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் பிரதான அதிகாரி லோயிட் பிளென்டே தெரிவிக்கையில்;
"பயங்கரவாதப் புலிகள் இயக்கத்துக்காக தம்பிராஜா பிரபாகரன் இதுவரையில் பல இலட்சம் கனடிய டொலர்களை சேகரித்திருப்பதை நிரூபிக்கும் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவற்றின் அடிப்படையில் தொடர்ந்தும் விசாரணைகள், தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மேலும், இவரைப் போல புலிகள் இயக்கத்துக்காக நிதிசேகரிக்கும் ஏனையோரைப் பற்றியும் தொடர்ந்து தீவிர விசாரணைகள் கனடாவில் இலங்கைத் தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படுமெனவும் கூறியுள்ளார். கனடாவில் தற்போது மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் அரசியல் தஞ்சம் பெற்று வாழ்ந்து வருகின்றனர்.
லங்காதீப 23.03.2008.