சர்வதேச கிரிக்கெட் சபை செயற்குழு உறுப்பினர்களின் வற்புறுத்தல் காரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் சுனில் காவஸ்கருக்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் சபையின், கிரிக்கெட் குழுத்தலைவராக 2000 ஆம் ஆண்டிலிருந்து இருந்து வருகின்றார் காவஸ்கர். மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த கிளைவ் வால் கொட் அப் பதவியிலிருந்து விலகியதற்குப் பின் காவஸ்கர் பொறுப்பேற்றார்.
சமீபகாலமாக ரி.வி.யில் வர்ணனையாளராகவும், பத்திரிகைகளில் சிறப்புக் கட்டுரைகளும் அவர் எழுதிவருகிறார். இது, ஐசிசி - யின் கொள்கைக்கு எதிராகவுள்ளதாக கடந்த வாரம் டுபாயில் கூடிய செயற்குழு உறுப்பினர்கள் குரல் எழுப்பியுள்ளனர். இதனால் அவர் தர்மசங்கடத்துக்குள் ளாகியுள்ளார். ஐசிசியில் இந்தியாவின் பலம் அதிகரிப்பதைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் இப் பிரச்சினையை எழுப்பியுள்ளனர்.
ஏதாவது ஒருபதவியிலிருக்குமாறு காவஸ்கரை செயற்குழு கேட்டுள்ளது. அத்துடன் இவ்விரு பதவிகளில் ஏதாவது ஒன்றை அவரே தேர்வு செய்து கொள்ளட்டும் எனவும் உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனால் கிரிக்கெட் குழு தலைவர் பதவியை அவர் ராஜிநாமா செய்துவிடலாம் எனத் தெரிகிறது.
இருந்தாலும் ஐசிசி- யின் முதன்மைச் செயல் அதிகாரி மால்காம் ஸ்பீடை சந்தித்த பிறகே காவஸ்கர் இறுதி முடிவு மேற்கொள்ளலாம் என ஐசிசி செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளை `டைனோசர்ஸ்' என அவர் சமீபத்தில் வர்ணித்தது, செயற்குழு உறுப்பினர்களின் வெறுப்பை சம்பாதித்துள்ளது.
காவஸ்கர் அவ்வாறு தெரிவித்திருந்தபோதிலும் தொடர்ந்து பணியாற்றுவதையே ஐசிசி விரும்புவதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.