இலங்கை அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவதற்கு மேற்கிந்திய அணி இறுதி நாளில் 340 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலையிலிருந்தது.
முன்னதாக மேற்கிந்திய அணி`பாலோ-ஒன்'னுக்குச் செல்லுமென எதிர் பார்க்கப்பட்ட போதும் மேற்கிந்திய அணி முதல் இனிங்ஸில் கடைசி வரை போராடி `பாலோ-ஒன்' னை தவிர்த்தது.
3ஆம் நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 269 ஓட்டங்களைப் பெற்றிருந்த மேற்கிந்திய அணி 4ஆம் நாள் ஆட்டம் தொடங்கி சிறிது நேரத்தில் அனைத்து விக்கெட்டுக்ளையும் இழந்து 280 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் மேற்கிந்திய அணி ஓட்டங்கள் குவிப்பதை சிறப்பாகத் தடுத்து நிறுத்தியிருந்தனர்.
இந்த நிலையில் 2ஆவது இனிங்ஸில் களமிறங்கிய இலங்கை அணிக்கு மேற்கிந்திய பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்டியை கொடுத்தனர். அடித்து ஆடி ஓட்டங்களை பெற இலங்கை அணி முற்பட்ட போது விக்கெட்டுகள் விழத்தொடங்கின.
விரைவாக ஓட்டங்களைப் பெற்று மிகப் பெரியதொரு இலக்கை நிர்ணயித்து அதற்கும் மேற்கிந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுவிட வேண்டுமென்ற நோக்கில் இலங்கை அணியினர் ஆடினர்.
இந்த நிலையில் 4ஆம் நாள் தேநீர் இடைவேளையுடன் இலங்கை அணி தனது 2ஆவது இனிங்ஸை நிறுத்தியது. இதன் போது இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 240 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இதில், ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மலிங்க வர்ணபுர-62, திலான் சமரவீர-56(ஆட்டமிழக்காது), கப்டன் மஹேல ஜெயவர்த்தன-33, மைக்கள் வன்டொற்-24, குமார் சங்ககார-21, மிராண்டோ-14, சமிந்த வாஸ்-13 ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில் பென்-3,பிராவோ-2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தனர்.
முதல் இனிங்ஸில் 196 ஓட்டங்களை கூடுதலாகப் பெற்றிருந்த இலங்கை அணி 2ஆவது இனிங்ஸில் பெற்ற 240 ஓட்டங்களுடன் சேர்த்து மேற்கிந்திய அணிக்கு வெற்றி இலக்காக 436 ஒட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.
மிகப் பெரிய ஓட்ட இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்திய அணி முதல் விக்கெட்டை 22 ஓட்டங்களில் இழந்தது. டெவோன் ஸ்மித் 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இதன் பின் ஜோடி சேர்ந்த பிராவோ மற்றும் சர்வான், 4ஆம் நாள் ஆட்டம் முடிவடையும் வரை ஆட்டமிழக்காது சிறப்பாக ஆடினர்.
4ஆம் நாள் ஆட்டம் முடிவடையும் போது மேற்கிந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 96 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. பிராவோ-46, சர்வான்-34 ஓட்டங்களுடன் ஆடிக்கொண்டிருந்தனர்.
இந்தப் போட்டியில் வெற்றி பெற கடைசி நாளில் 340 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் மேற்கிந்திய அணி உள்ளது.