ஈராக்கில் பாதுகாப்பு படையினருக்கும் ஸியா போராளிகளுக்குமிடையில் பஸ்ரா நகரில் இடம் பெற்று வந்த கடும் மோதல்கள் தற்போது பாக்தாத்தின் சத்ர் நகர் உட்பட ஸியாக்கள் வாழும் ஏனைய பகுதிகளுக்கும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈராக் பிரதமர் நூரிமாலிகி நாட்டின் தென் பகுதியிலுள்ள மாலிகி நாட்டின் தென் பகுதியிலுள்ள எண்ணெய் வள நகரான பஸ்ராவுக்கு மேற்கொண்ட விஜயத்திலிருந்து அங்கு இடம் பெற்று வரும் வன்முறைகளில் இதுவரை 30 பேர் பலியாகியுள்ளனர்.
பஸ்ராவிலுள்ள அதிகளவு ஆயுதக் குழுக்களால் அங்கு பதற்ற நிலை பரவி வருகிறது.
மெஹ்தி இராணுவக் குழுவின் அதிகாரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தவறியமை தொடர்பில் அரசாங்கம் இது வரை எது வித கருத்தையும் தெரிவிக்கவில்லையென விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
இக் குழுவின் தலைவரான மதகுரு மொஹ்டாடா சத்ர் அரசின் அதிகாரங்களை மீறும் போராட்டங்களை நாடு முழுவதும் ஆரம்பிக்குமாறு தனது போராளிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
சுமார் 15,000 துருப்புக்களை கொண்ட 3 படைப்பிரிவுகள் பஸ்ராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பஸ்ரா, குட், சமவா, நசிறியா, ஹில்ஜா மற்றும் டிவானியா ஆகிய நகரங்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பஸ்ரா நகர் முழுவதும் புகை மண்டலங்கள் எழுந்து கொண்டிருப்பதாகவும் விமானங்கள் வானத்தில் வட்டமிட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடும் மோதல்கள் நடைபெறும் பகுதிகளுக்குள் செல்வதற்கு செய்தியாளர்களுக்கு அனுமதி வழங்கப்படாமையால் இம் மோதல்களில் எவர் செல்வாக்கு செலுத்துகின்றனரென்பது தொடர்பான விபரங்கள் எதுவும் தெரியவரவில்லை.
மெஹ்தி இராணுவக் குழுவிடமிருந்து ஈராக் இராணுவத்தினர் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதே வேளை பாக்தாத்தின் அதிகூடிய பாதுகாப்பு வலயமான `கிறீன் சோன்' மீதும் ரொக்கெட் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுவதும் இது தொடர்பான சேதவிபரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை.
இந்நிலையில் சத்ர் நகருக்கு மோதல்கள் பரவியுள்ளதன் காரணமாக அந் நகருக்கான போக்குவரத்துக்கள் யாவும் துண்டிக்கப்பட்டுள்ளன.