* `இந்திய ஊடுருவல்காரர்களுக்கு அனுமதி இல்லை'
இந்தியாவில் கலகம் விளைவிக்கும் ஊடுருவல் காரர்கள் பூட்டானுக்குள் பதுங்க ஒருபோதும் இடம் அளிக்க மாட்டோம் என பூட்டான் அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது.
பூட்டானில் தற்போது மன்னராட்சி முடிவுக்கு வந்து அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆட்சியமைக்க உள்ளது. அண்மையில் நடைபெற்ற தேர்தலில் டி.பி.டி.கட்சி பெரும்பான்மை இடங்களைப் பிடித்து ஆட்சியை அமைக்க உள்ளது. இந்நிலையில், மன்னராட்சியின் போது கடைப் பிடிக்கப்பட்ட வெளியுறவுக் கொள்கையே தொடரப்படும் என்று டி.பி.டி.கட்சியின் செய்தித் தொடர்பாளர் பால்டென் ஷெரிங் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் தேர்தல் நடைபெற்றபோது இந்தியாவின் வடகிழக்கு மாநில தீவிரவாதிகளால் அங்கு தேர்தல் சீர் குலைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. அதையடுத்து இத்தகைய குழுக்கள் மீதான நடவடிக்கை குறித்து புதிதாக பொறுப்பேற்கவுள்ள டி.பி.டி.கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
உல்ஃபா, நாகலாந்து மக்கள் குழு, கே.எல்.ஓ. பயங்கரவாத குழு உள்ளிட்ட குழுக்கள் மீது 2003 ஆம் ஆண்டு பூட்டான் அரசு கடுமையான நடவடிக்கை எடுத்தது. அந்நாட்டில் இந்த பயங்கரவாத குழுக்கள் ஏற்படுத்தியிருந்த 15 பயிற்சி முகாம்களை பூட்டான் இராணுவம் அழித்தது. அத்துடன் உல்ஃபா அமைப்பின் முக்கிய தலைவர்களையும் பிடித்து இந்தியாவிடம் ஒப்படைத்தது.
இந்தியாவில் பிரிவினைவாதத்தைத் தூண்டும் சக்திகளை ஒருபோதும் பூட்டான் அனுமதிக்காது என்று முன்னாள் பிரதமர் யஷேஸிலிம்பா தெரிவித்தார். பூட்டானின் தெற்கு திம்பு மாகாணத்திலிருந்து அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவும் சீனாவும் பூட்டானின் நெருங்கிய நட்பு நாடுகளாகும். இவ்விரு நாடுகளுடன் சுமுக உறவை மேற்கொள்ளவே விரும்புவதாக ஷெரிங் தெரிவித்தார். அண்டை நாடுகளுடன் சுமுக உறவை மேற்கொண்டு அவற்றை மேம்படுத்துவோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளதாக அவர் கூறினார். மாவோயிஸ்ட்டுக்களால் ஏற்படும் பாதிப்புக்கள் இந்தியா மற்றும் நேபாளத்தில் உள்ளது போல பூட்டானில் தீவிரமாக இல்லை. இருப்பினும் அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ள மாவோயிஸ்டுகளின் நடவடிக்கைகள் பிரச்சினை ஏற்படுத்தும் அளவுக்கு ஒரு போதும் வளர விடமாட்டோம் என்று கூறினார்.
தேர்தலைப் புறக்கணிக்குமாறு பல்வேறு பகுதிகளில் குண்டு வெடிப்புகளை நேபாளத்தில் மாவோயிஸ்ட்டுகள் நிகழ்த்தினர். ஆனால் பூட்டானில் மக்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர்.
பூட்டானில் மொத்தம் 79.4 சதவீத வாக்குகள் பதிவானது. மொத்தமுள்ள 47 இடங்களில் 44 இடங்களை டி.பி.டி.கட்சி கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.