மலையக பெருந்தோட்ட பகுதிகளில் ஆயிரம் பேருக்கு ஒருவர் என்றடிப்படையில் கிராமசேவை மற்றும் திடீர் மரண விசாரணைகள் அதிகாரிகள் நியமிக்கப்படவேண்டுமென்று தெரிவித்துள்ள இ.தொ.ஐ.மு.தலைவர் டி.சென்னன் மேற்கண்ட பதவிகளுக்கு நியமிக்கப்படுவோர் தமிழ்மொழி மூலம் கடமையாற்ற கூடியவர்களாக இருக்க வேண்டுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கரு ஜெயசூரியவிற்கு மகஜரொன்றும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அம் மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
1999 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அரசுக்கு விடுத்த வேண்டுகோளையடுத்து மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் இரண்டாயிரம் பேருக்கு ஒருவரென்றடிப்படையில் கிராமசேவக அதிகாரிகளை நியமிக்க அரசு இணக்கம் தெரிவித்தது.
அவ்வேளையில், நாம் அரசுக்கு மீண்டும் அழுத்தங்களைக் கொடுத்ததுடன் இரண்டாயிரம் பேருக்கு ஒரு கிராமசேவை அதிகாரியினால் கடமையாற்றுவதென்பது இயலாத விடயமென்பதையும் தெளிவுபடுத்தியிருந்தோம்.
அரசு எமது கோரிக்கையை ஏற்று ஆயிரம் பேருக்கு ஒருவர் என்றடிப்படையில் கிராமசேவை அதிகாரிகளுக்கு நியமனங்களை வழங்கியது. அதன்பிரகாரம் ஊவா மாகாணத்திற்கு 32 பேரை நியமிக்க ஏற்பாடகியிருந்தபோதிலும் 27 கிராமசேவை அதிகாரிகளுக்கு மட்டுமே நியமனங்கள் வழங்கப்பட்டன. நுவரெலியா மாவட்டத்திற்கு 69 பேரை நியமிக்க ஏற்பாடாகியிருந்தபோதிலும் 53 கிராமசேவை அதிகாரிகளுக்கு மட்டுமே நியமனங்கள் வழங்கப்பட்டன.
அத்துடன் மாத்தளை, கண்டி, இரத்தினபுரி ஆகிய பகுதிகளுக்கும் தமிழ் கிராமசேவை அதிகாரிகள் எவருமே நியமிக்கப்படவில்லை.
வழங்கப்பட்டிருக்கும் ஊவா மற்றும் நுவரெலியா பகுதி பெருந்தோட்டங்களுக்கான கிராமசேவை அதிகாரிகள் 21 பேருக்கான வெற்றிடங்கள் 1999 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து வந்தது. ஆனால், 2008 ஆம் ஆண்டு வரைக்குமான ஒன்பது ஆண்டு காலப்பகுதியில் பெருந்தோட்டங்களில் மக்கள் தொகை மேலும் அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பிற்கமைய கிராமசேவை அதிகாரிகள் நியமிக்கப்படல் வேண்டும்.
அத்துடன், மாத்தளை, கண்டி, இரத்தினபுரி போன்ற தோட்டப்பகுதிகளுக்கு கிராம சேவை அதிகாரிகள் நியமிக்கும் விடயத்திலும் கூடிய கவனம் செலுத்தப்படல் வேண்டும்.
அத்துடன், மலையகப் பெருந்தோட்ட பகுதிகளில் விவாகப் பதிவாளர்கள் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரிகள் கடமையில் இல்லாததால் தோட்டப் பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ளனர். இதுவிடயத்திலும் தாங்கள் கூடிய அக்கறை செலுத்தி ஆயிரம் பேருக்கு ஒரு விவாகப் பதிவாளர் மற்றும் திடீர் மரணவிசாரணை அதிகாரிகளை நியமிக்கவும் துரித நவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளது.