* மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர்
மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்த அடைமழையால் 2007/2008 ஆம் ஆண்டு காலபோகத்தில் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கையும் மேட்டுநிலப் பயிற்செய்கையும் பெரிதும் அழிந்துபோயுள்ளதாக மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் ம. ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்;
நெற்செய்கையைப் பொறுத்தவரை மாவட்டத்தில் மொத்தமாக செய்கை பண்ணப்பட்ட 5,855 ஹெக்டேரில் (14,637ஏக்) மழைவெள்ளத்தால் 4835 ஹெக் (12,087 ஏக்) நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட நெற்பயிர்ச்செய்கை அழிவடைந்துள்ளது.
இவற்றை பிரதேச ரீதியாக நோக்கும்போது நானாட்டன் பிரதேசத்திற்குட்பட்ட பகுதிகளில் நெற்பயிற்செய்கையில் மொத்தமாக செய்கை பண்ணப்பட்ட 5080 ஹெக்டேரில் (12,700 ஏக்) 4200 ஹெக்டேர் (10,500 ஏக்) மழையினால் அழிவடைந்துள்ளது.
மன்னார் தீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் செய்கை பண்ணப்பட்ட 560 ஹெக்டேரில் (1,400 ஏக்) 475 ஹெக்டேர் (1,187 ஏக்) செய்கை மழையினால் பாதிப்படைந்துள்ளது. மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் செய்கை பண்ணப்பட்ட 215 ஹெக்டேரில் (537.5 ஏக்) 160 ஹெக்டேர் (400 ஏக்) நெற்செய்கை மழையினால் பாதிப்படைந்துள்ளது.
மாவட்டத்தில் இக்காலபோகத்தில் மொத்தமாக எதிர்பார்க்கப்பட்ட 28,925 மெற்றிக்தொன் அறுவடையில் இற்றைவரை 6120 மெற்றிக்தொன் மட்டுமே அறுவடை செய்யப்பட்டுள்ளது. மீதி 22.805 மெற்றிக்தொன் நீரில் மூழ்கியுள்ளது. இதில் தற்போது மேற்கொள்ளப்படும் 50% மான நெல் அறுவடையில் நெல் நிறம் குறைந்தும் முளைத்தும், மடி நெல்லாகவும் காணப்படுகின்றது. இதனை அறுவடைசெய்து சூடடிக்கும் இடத்திற்கு கொண்டு வருவதற்கு 1 ஏக்கருக்கு ரூபா 10,000 தொடக்கம் ரூபா12,000 வரை செலவாகின்றது.
தற்போது இங்கு அறுவடைக்கு பெரும் தொழிலாளர் தட்டுப்பாடு நிலவுவதுடன் வயலில் நீர் நிற்பதால் ஒருங்கிணைந்த அறுவடை இயந்திரத்தை பயன்படுத்தி அறுவடை செய்ய முடியாத நிலையுமுள்ளது. மேலும் மீதி 50% நெற்பயிர்கள் மழையினால் முற்றாக நீரில் மூழ்கியுள்ளது. இதனால் இக்காலபோகத்தில் ஈடுபட்ட 2110 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளனர்.
மாவட்டத்தில் செய்கை பண்ணப்பட்ட 2370 ஹெக்டேர் மேட்டு நிலப் பயிர்ச்செய்கையில் 1840 ஹெக்டேரில் பயிர்ச்செய்கை மன்னார் பட்டினம், நானாட்டான், மாந்தை மேற்கு ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் மழையினால் பாதிப்படைந்துள்ளது. இதனால், இப்பயிற்செய்கையில் ஈடுபட்ட 1390 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன.
கடந்த 15.03.2008 தொடக்கம் 23.03.2008 வரையான காலப்பகுதியில் தொடர்ந்து பெய்த இம் மழையின் அளவு சராசரியாக 23.0.மி.மீ. இருந்து 61.9 மி.மீ.வரை நீடித்தது.
மழையினால் பாதிப்படைந்துள்ள உயிலங்குளம் நானாட்டன், முருங்கன் பகுதி விவ சாயிகள் நிவாரணம் வேண்டி தங்கள் பகுதிகளுக்குரிய பிரதேச செயலகங்களையும் கமநலகேந்திர நிலையங்களையும் நாடி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலான விவசாயிகள் வங்கிகளில் கடனடிப்படையில் பணத்தைப் பெற்று தங்கள் நகைகளை அடகு வைத்தும் இக்காலபோகத்தில் பயிர்ச்செய்கையை மேற்கொண்டிருந்தனர்.
இதனால், இம்மழையினால் ஏற்பட்டுள்ள பயிற்செய்கை அழிவினால் விவசாயிகள் மனவிரக்த்தியுற்ற நிலையில் காணப்படுகின்றனர். இவர்கள் வங்கிகளில் பெற்றுக்கொண்ட விவசாய கடன்களுக்கு வட்டியை தள்ளுபடி செய்து கடன்தொகையை மட்டும் செலுத்த ஆவன செய்யுமாறு வங்கிகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.