* மூதூர் கிழக்கில் இந்த அவலம்
மூதூர் கிழக்கிலிருந்து கடந்த 23 மாதங்களுக்கு முன் அகதிகளாக இடம்பெயர்ந்த மக்களில் ஒரு பகுதியினர் தற்போது அதிஉயர் பாதுகாப்பு வலயமாக்கப்பட்டுள்ள தங்கள் சொந்த இடங்களில் அடிப்படை வசதிகள் எதுவுமற்ற நிலையில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
மூதூர் கிழக்கிலிருந்து 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி ஆரம்பமான விமானத் தாக்குதலையடுத்து பள்ளிக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 517 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் இடம்பெயர்ந்து வெவ்வேறிடங்களில் தங்கி கடைசியில் மட்டக்களப்பைச் சென்றடைந்தனர்.
இந்த நிலையில் மூதூர் கிழக்கில் 11 கிராமசேவகர் பிரிவுகள் படையினரால் அதிஉயர் பாதுகாப்பு வலயமாக்கப்பட்டு தற்போது பள்ளிக்குடியிருப்பில் மட்டும் 138 குடும்பங்களைச் சேர்ந்த மக்களை மீளக்குடியமர அரசு அனுமதித்துள்ளது.
தற்போது இவர்கள் மட்டக்களப்பிலிருந்து மீள்குடியேற்றத்திற்காக இங்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இவர்களது வீடுகள் அனைத்தும் கூரை ஓடுகளோ, சீற்களோ, மரங்களோ இன்றியும் ஜன்னல்கள், கதவுகள் எதுவுமின்றியும் அனைத்து பொருட்களும் முற்றாகச் சூறையாடப்பட்ட நிலையில், பாடசாலை ஒன்றிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அடிப்படை வசதிகள் எதுவுமேயற்ற நிலையில் மீண்டும் தாங்கள் சொந்த இடத்தில் அகதிகளாக்கப்பட்டுள்ளதாக இவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.