2008 ஆம் ஆண்டுக்கான முதலாம்தர மாணவர் அனுமதி 25 சதவீதமான பாடசாலைகளில் இதுவரை பூர்த்திசெய்யப்படவில்லையென குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பாடசாலை முதலாம் தவணை விடுமுறை ஆரம்பிக்க இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் முதலாம் தர மாணவர் அனுமதி இதுவரை முழுமைபெறாமை குறித்து கல்விச் சமூகம் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளது. இவ்வருட முதலாம்தர மாணவர் அனுமதி உயர் நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் மேற்கொள்ளப்படுவதால் மாணவர் பாதிக்கப்படும் பட்சத்தில் அதற்கெதிராக பெற்றோர் மீண்டும் உயர்நீதிமன்றத்தை நாடமுடியாத நிலையேற்பட்டுள்ளது.
75 சதவீதமான பாடசாலைகளே முதலாம்தர மாணவர் அனுமதியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நிலையில், தமது பிள்ளைகளுக்கு அனுமதி வழங்காமல் பாடசாலைகள் காலத்தை இழுத்தடித்து வருவதாக பெற்றோர் தரப்பில் தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மாணவர்களின் பெற்றோர்கள் பிரபல பாடசாலைகளுக்கு முன் போராட்டங்களை நடத்தியபோதும், அதனால் பயனேதும் ஏற்படவில்லை.
இந்நிலையில் நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் தமது பிள்ளைகளை தனியார் பாடசாலையில் அனுமதிக்க அனுமதி கோரியபோதும் பாடசாலை தவணைக்காலம் ஆரம்பித்துவிட்டது. எனிவே உங்கள் பிள்ளைகளை அனுமதிக்க முடியாதென பல தனியார் பாடசாலைகள் பிள்ளைகளுக்கு அனுமதி வழங்க ஒரேயடியாக மறுத்துள்ளன.
இதனால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் அநாதரவான நிலையில் பாடசாலைகளில் முதலாம்தர அனுமதி கிடைக்காமல் கல்வி கற்கும் அடிப்படை உரிமை மறுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கல்வியமைச்சின் செயலாளர் நிமல் பண்டாரவும் 75 சதவீதமான பாடசாலைகளே முதலாம்தர அனுமதியை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளதை ஏற்றுக்கொண்டுள்ளார்.
தமது பிள்ளைகளுக்கு இவ் வருடத்திற்கான பாடசாலை அனுமதி எப்போது கிடைக்குமென ஆயிரக்கணக்கான பிள்ளைகளும் பெற்றோர்களும் அங்கலாய்ப்பது குறித்து கல்வியமைச்சு உடனடியாக கவனம் செலுத்த வேண்டுமென்பதே கல்விச் சமூகத்தின் எதிர்பார்ப்பாகுமென பல்வேறு தரப்பினரும் `தினக்குரலுக்கு' தெரிவித்தனர்.