* விடுதலைப் புலிகள் தெரிவிப்பு
மணலாறு பகுதியில் கடந்த இரு நாட்கள் இடம்பெற்ற கடும் சமரில் 15க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் புதன்கிழமை பிற்பகல் 1.15 மணியளவில் சிலோன் தியேட்டர் பகுதியில் கடும் சமர் நடைபெற்றுள்ளது.
இந்தப் பகுதியிலிருந்து படையினர் பாரிய முன்நகர்வு முயற்சியை மேற்கொண்ட போது
அதற்கெதிராக தாங்கள் கடும் பதில் தாக்குதலை நடத்தியதாகவும் மாலை 5 மணிவரை நடைபெற்ற இந்தக் கடும் சமரில் ஐந்திற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டு படை நகர்வு முறியடிக்கப்பட்டதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் போது இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரது சடலம் தங்களால் கைப்பற்றப்பட்டதாகவும் புலிகள் கூறியுள்ளனர்.
இதேநேரம், செவ்வாய்க்கிழமை இதே பகுதியில் பாரிய முன்நகர்வு முயற்சியில் ஈடுபட்ட படையினர் மீது நடத்தப்பட்ட கடுமையான பதில் தாக்குதலில் பத்திற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் போது ரி. 56 ரகத் துப்பாக்கி ஒன்று, 18 -ரவைக் கூடுகள், 4000- ரவைகள், ஆயுதங்கள், தாங்கும் மேலங்கிகள்- நான்கு, ஐந்து தலைக்கவசங்கள், இரு கத்திகள், நான்கு இராணுவப் பைகள், ஆறு நீர்க்கான்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டதாக புலிகள் தெரிவித்துள்ளனர்.