கிழக்கு மாகாண சபைத் தேர்தல் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்குமிடையே சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
எதிர்க் கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் ஆர்.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, ரி.கனகசபை, எஸ்.பத்மநாதன் ஆகியோரும் ஐ.தே.க. சார்பில் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்து கொண்டனர்.
இதன் போது கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பாகவும் வடக்கில் நடைபெற்று வரும் கடும் மோதல்கள் மற்றும் நாட்டில் இடம்பெறும் மிகமோசமான மனித உரிமை மீறல்கள் குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்தச் சந்திப்பில் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் ஐ.தே.க. போட்டியிடுவது குறித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கவுள்ள முடிவு குறித்தும் ஆராயப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சுமார் ஒன்றரை மணி நேரம் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.