இந்திய கிரிக்கெட் லீக்கிற்கும் இந்திய பிரீமியர் லீக்கிற்கும் இடையே போட்டா போட்டி காணப்படும் நிலையில், இரு அணிகளும் களத்தில் மோதிக்கொள்ளலாம் என்ற யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.
ஐ.சி.எல்.லின் லாகூர் பாட்ஷா அணியின் கப்டனும் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கப்டனுமான இன்சமாம் உல் ஹக் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.
இன்சமாமின் யோசனைக்கு ஐ.சி.எல்.லின் தலைவர் கபில்தேவ் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த யோசனை கிரிக்கெட் மேம்பாட்டிற்கு உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஐ.சி.எல். மற்றும் ஐ.பி.எல். போட்டிகளில் வெற்றிபெறும் அணிகளுக்கிடையே மூன்று போட்டிகளை நடத்தலாமென்று இன்சமாம் முன்னர் யோசனை கூறியிருந்தார். ஐ.சி.எல்.லையும் ஐ.பி.எல்.லையும் எதிரிகளாக தாம் கருதவில்லை என்றும் இரு அணிகளுமே கிரிக்கெட்டை வளர்க்க உருவான அமைப்புகள் என்றும் அவர் கூறியிருந்தார்.
ஆனால், இந்த யோசனையை ஏற்க ஐ.பி.எல். நிர்வாகிகள் மறுத்துவிட்டனர். ஐ.சி.எல்.ஐ தங்களுக்கு போட்டியாக கருதவில்லை என்று ஐ.பி.எல். தலைவர் லலித் மோடி கூறியுள்ளார்.