வார்த்தைப் போரை தடுக்க ஐ.சி.சி. அதிரடி முடிவெடுத்துள்ளது. இதை கட்டுப்படுத்துவது கப்டன்களின் பொறுப்பென அனைத்து கிரிக்கெட் சபைகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.
கிரிக்கெட்டில் சமீபகாலமாக வார்த்தைப் போர் அதிகரித்து வருகிறது. அதுவும் இந்தியா, அவுஸ்திரேலிய அணிகள் மோதும் போட்டிகளில் சர்ச்சைகள் அதிகம் வெடித்தன. இதில் இந்திய வீரர்களே அதிகம் பாதிக்கப்பட்டதால், வார்த்தைப் போர் மற்றும் ஆடுகளத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளுதல் போன்ற பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்திய கிரிக்கெட் சபை (பி.சி.சி.ஐ.) முயற்சித்து வருகிறது. சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) இதற்கான சட்டத்தை விரைவில் அமுல்படுத்துமாறு தொடர்ந்து வலியுறுத்தியது.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஐ.சி.சி.இது தொடர்பாக அனைத்து கிரிக்கெட் சபைகள் மற்றும் கப்டன்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளது.
ஐ.சி.சி. 10 டெஸ்ட் அணிகளின் கப்டன், கிரிக்கெட் சபைகள், எலைற் பனல் நடுவர்கள் மற்றும் 7 போட்டி நடுவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
இதில் கிரிக்கெட்டின் எழுச்சியை காப்பதில் வீரர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். தங்கள் அணியை சரியான திசையில் கொண்டு செல்ல வேண்டியது கப்டனின் கடமை. களத்தில் சர்ச்சைகள் உருவாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது கப்டனின் பொறுப்பு. வீரர்களும் இதை கடைப்பிடிக்க வேண்டும்.
மோசமான வார்த்தைகளை பயன்படுத்துவது, ஜாடையால் வம்பிழுப்பது போன்றவைகள் தான் சர்ச்சைகளின் ஆரம்பப் புள்ளியாக இருக்கிறது. ஒவ்வொரு வீரர்களும் தங்களுக்கு அடுத்து வரக்கூடிய தலைமுறையினருக்கு `ரோல் மொடலாக' திகழக்கூடியவர்கள். இதனால், இவர்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். கப்டன்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக அணியை வழிநடத்திச் செல்ல வேண்டும்.
வீரர்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம். சர்வதேச போட்டியில் ஆக்ரோஷமாக மோதிக்கொள்ள வேண்டும் என்பது கட்டாயமில்லை. ஒவ்வொருவரும் அடுத்தவரை மரியாதையாக நடத்த வேண்டும். நடுவர்களும் இவ்விவகாரத்தில் முழு ஈடுபாடு காட்ட வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.