வட அமெரிக்காவில் ஒலிம்பிக் தீப ஊர்வலத்தின் தூரத்தை 8 மைல் தூரத்திலிருந்து 6 மையில்களாக குறைக்குமாறு சான்பிரான்சிஸ்கோ நிர்வாகத்தை சீனா கேட்டுள்ளது.
மனித உரிமை அமைப்புகள் ஒலிம்பிக் தீப பயணத்தின் போது சீனாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாக அறிவித்திருப்பதைத் தொடர்ந்தே சீனா இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.
சான் பிரான்சிஸ்கோவில் ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி ஒலிம்பிக் தீபத்தின் பயணம் நடைபெறவுள்ளது. அப்போது திபெத் பிரச்சினையில் சீனாவின் போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக மனித உரிமை அமைப்புகள் அறிவித்துள்ளன.
இந்த ஊர்வலம் உலகம் முழுவதும் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளி பரப்பாகவுள்ளது. அப்போது தர்மசங்கடமான நிகழ்வுகள் நிகழாமல் தடுப்பதற்காக ஒலிம்பிக் ஜோதி பயணத்தை குறைத்துக் கொள்ளுமாறு சான்பிரான்சிஸ் கோவை சீனா கேட்டுள்ளது.
இதனிடையே சான்பிரான்சிஸ்கோ மேற்பார்வையாளர் டாம் அமியானோ நேற்று முன்தினம் ஒலிம்பிக் ஜோதியின் பயணம் குறித்த விபரங்களை வெளியிடுமாறு மேயர் மற்றும் பொலிஸாரை கேட்டுள்ளார்.