மேற்கிந்திய மண்ணில் இலங்கை அணி முதல் தடவையாக டெஸ்ட் வெற்றியை பெற்றுள்ளது.
கயானாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 121 ஓட்டங்களால் மேற்கிந்திய அணியைத் தோற்கடித்ததன் மூலமே இலங்கை அணி இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை பெற்றுள்ளது.
சமிந்த வாஸின் அபார பந்து வீச்சின் மூலமே இலங்கை அணிக்கு இந்த வெற்றி சாத்தியமானது.
இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இலங்கை அணி முதல் இனிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 476 ஓட்டங்களையும் 2 ஆவது இனிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 240 ஓட்டங்களையும் பெற்றது.
மேற்கிந்திய அணி முதல் இனிங்ஸில் 280 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் இந்தப் போட்டியில் வெற்றி பெற 436 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலையில் 4 ஆம் நாள் தேநீர் இடைவேளையின் பின்னர் களமிறங்கியது.
நாலாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 96 ஓட்டங்களைப் பெற்றிருந்த மேற்கிந்திய அணி 5 ஆம் நாள் ஆரம்பத்திலும் சிறப்பாக ஆடியது.
முதல் விக்கெட்டை 22 ஓட்டங்களில் இழந்த மேற்கிந்திய அணிக்கு 2 ஆவது விக்கெட் ஜோடியாக களமிறங்கிய பிராவோ மற்றும் சர்வான் மிகச் சிறப்பாக ஆடி 134 ஓட்டங்களை எடுத்த போது இந்தப் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடையலாமென்றதொரு நிலையேற்பட்டது.
எனினும், 83 ஓட்டங்களுடன் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த பிராவோவின் விக்கெட்டை முரளிதரன் கைப்பற்றியதையடுத்து மேற்கிந்திய அணியின் சரிவு ஆரம்பமானது.
2 ஆவது விக்கெட் 156 ஓட்டங்களில் வீழ்ந்த நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழத் தொடங்கின. நண்பகல் உணவு இடைவேளையின் போது 2 விக்கெட் இழப்புக்கு 170 ஓட்டங்களைப் பெற்றிருந்த மேற்கிந்திய அணி அதன் பின் தொடர்ந்து விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது.
சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த சர்வான் 72 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் நடுவரின் தவறான தீர்ப்பால் மிராண்டோவின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழக்க மேற்கிந்திய அணியின் தோல்வி பெரும்பாலும் உறுதியானது.
இதன் பின் அணித் தலைவர் கிறிஸ் கெயில் முயன்றும் ஒருபுறம் தொடர்ந்து விக்கெட்டுகள் வீழந்து கொண்டிருக்க தேநீர் இடைவேளையின் பின் மேற்கிந்திய அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 315 ஓட்டங்களையே பெற்றது.
தேநீர் இடைவேளைக்கு முன் முரளிதரனின் பந்து வீச்சில் நடுவரின் தவறான தீர்ப்பால் ஹிண்ட்ஸ் ஆட்டமிழந்தார். இந்த நிலையில் அணித் தலைவர் கெயில் கடைசி வரை ஆட்டமிழக்காது 51 ஓட்டங்களைப் பெற்றார். ஏனைய வீரர்கள் மிகக் குறைந்த ஓட்டங்களையே பெற்றனர்.
பந்து வீச்சில் சமிந்த வாஸ் மிகச் சிறப்பாக வீசி 5 விக்கெட்டை யும் முரளிதரன் 3 விக்கெட்டையும் மிராண்டோ இரு விக்கெட்டையும் கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக சகல துறைகளிலும் பிரகாசித்த சமிந்த வாஸ் தெரிவு செய்யப்பட்டார்.
இந்தப் போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இலங்கை அணி மேற்கிந்திய மண்ணில் முதல் டெஸ்ட் வெற்றியை பெற்றுள்ளது.
ஏற்கனவே, மேற்கிந்திய மண்ணில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி 2 இல் தோல்வியை தழுவியதுடன், 2 போட்டிகளில் வெற்றி- தோல்வியின்றி முடிவடைந்தன.
இவ்விரு அணிகளுக்குமிடையில் 2 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி ரினிடாட்டில் நடைபெறவுள்ளது.