* `சமாதானத்திற்கான ஒரு குரல்' நூல் வெளியீடு இன்று
வேலணை வேணியன்
இன்று இலங்கையிலே இனப்பிரச்சினை பூதாகரமாக வளர்ந்து உச்சக்கட்டத்தை அடைந்து தமிழ் மக்களை ஜீரணிக்க முடியாத துன்பத்துள் ஆழ்த்தியுள்ளது. இனப்பிரச்சினைக்கு யுத்தத்தின் மூலம் அரசாங்கம் தீர்வொன்றினைக் கண்டடைய முடியாது என்பதனை உள்நாட்டில் உள்ள புத்திஜீவிகளும் வெளிநாட்டுத் தலைவர்கள் பலரும் இலங்கை அரசாங்கத்துக்கு இடித்துரைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.
இலங்கையிலே சமாதானம் நிலவ வேண்டும் என்பதற்காக பெரும்பான்மைச் சிங்களச் சகோதரர்கள் மத்தியிலிருந்து நீண்டகாலமாக குரல் கொடுத்து வருபவர்கள் பலர் இருக்கிறார்கள். குறிப்பாக தொடர்ந்து குரல் கொடுத்தும் பத்திரிகைகள் பலவற்றில் எழுதி வருபவரும் சகவாழ்வு மன்றத்துக்கான பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி குமார் ரூபசிங்க என்பது உண்மை. இவர் எமது மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், மக்கள் கண்காணிப்பு குழுவின் தலைவருமான மனோ கணேசனுடன் இணைந்து பல மக்கள் போராட்டங்களில் கலந்து எமது மக்களின் உரிமைக்காக காணமற்போன உறவுகளுக்காக, ஆட்கடத்தல்கள் பல்வேறு கைதுகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்திருக்கிறார்.
கலாநிதி குமார் ரூபசிங்க தமிழ் பத்திரிகைகளில் பல கட்டுரைகளை தமிழ் மக்களின் நலனுக்காகவும் சிங்கள மக்களுடன் தமிழ் மக்கள் சமாதானத்துடன் ஒற்றுமையுடன் வாழ்ந்து தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கவெனவும் எழுதி வந்திருக்கிறார்.
ஒரு பெரும்பான்மைச் சமூகத்திலிருந்து வந்து எமக்காக குரல் கொடுப்பவர்களை நிச்சயமாக நாம் வரவேற்க வேண்டும்.
கலாநிதி குமார் ரூபசிங்க தமிழ் பத்திரிகைகளில் எழுதிய பல கட்டுரைகளின் தொகுப்பு நூல் ஒன்று "சமாதானத்திற்கான ஒரு குரல்" என்ற தலைப்புடன் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் இன்று 03.03.2008 திங்கட்கிழமை மாலை 5.30 மணிக்கு வெளியிட்டு வைக்கப்படவுள்ளது. இவ்விழாவில் கொழும்பு வாழ் தமிழ் மக்கள் மட்டுமல்ல தமிழ்ப் பேசும் முஸ்லிம்கள் சமாதானத்தை விரும்பும் சிங்களச் சகோதரர்கள் கூட கலந்துகொள்வது காலத்தின் தேவையாக அமைய வேண்டும்.
தனியே இவ்விழா "சமாதானத்திற்கான ஒரு குரல்" நூல் வெளியீட்டு விழாவிற்கான விழாவாக அமைந்துவிடாது இவ்விழாவில் பல புத்திஜீவிகள் பிரமுகர்களின் குரல்களும் இவ்விழாவில் சமாதானத்துக்கான குரல்களாக ஒலிக்க இருக்கின்றன.
இந்நூலினை பெறவிரும்புவோர் மண்டபத்தில் வைத்து பெற்றுக்கொள்ள முடியும்.