-ஜெயந்தி ஜெய்சங்கர்-
ராத்திரி எனப் பெயரோடு அழைக்கப்படும் விரதங்களில் சிவனை துதித்து வணங்கப்படும் விரதமே சிவராத்திரியாகும். மகாவிஷ்ணுவுக்காகக் கொண்டாடப்படுவது வைகுண்ட ஏகாதசி விரதம் - சிவனுக்காகக் கொண்டாடப்படுவது சிவராத்திரி.
சிவராத்திரி நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மகா சிவராத்திரி, யோக சிவராத்திரி என்றெல்லாம் வகைப்படுத்தப்பட்டுள்ளன. சிவராத்திரிகள் பல இருந்தாலும் மாசி மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் வரும் புண்ணிய தினமே மகாசிவராத்திரியாகும். இந்துக்களின் முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானை எண்ணி முழு நாளும் வழிபடும் சிறப்பான விரதம் இந்த சிவராத்திரியாகும்.
அலை பாய்ந்து அவதிப்படும் மனிதனது ஐம்புலன்களும் ஓரிடத்தில் ஒடுங்கி பரமாத்மாவாகிய பரம்பொருளிடம் ஒடுங்கும் இந்த "ராத்திரி" மங்கலமான ஒளி சிந்தும் ராத்திரியாகும். எமது ஐம்புலன்களையும் அடக்கி இறைவனது சிந்தனையோடு இறையன்பில் மூழ்கியிருக்கும் போது இந்த உலகின் இடையூறுகள் எம்மை எதுவும் செய்வதில்லை.
உலகினில் உள்ள எல்லா பொருட்களுமே மாயையிடம் ஒடுங்கும் போது இந்த மாயையும் இந்த இறைசக்தியாகிய மகாசக்தியிடம் ஒடுங்கும். அப்படி மகாசக்தியிடம் ஒடுங்கும் காலம் இருள் நிறைந்ததாக இருக்கும். இந்த காலம் மகா பிரளயம் என்று சொல்லப்படுகின்றது.
உலகம் எத்தனை காலம் இருக்கின்றதோ அத்தனை காலமும் பிரளயமும் உண்டு. இந்த காலத்தில் தான் உமாதேவி நான்கு காலமும் சிவனைப் பூஜித்தார். முழுமுதற் கடவுளான சிவபெருமான் மனம் இரங்கி உமாதேவியை நோக்கி உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.
அதற்கு அம்மையார் நான் தங்களை மனமுவந்து பூஜித்த இந்த நாள் சிவராத்திரி எனப் பெயர் பெற வேண்டும். இந்த தினத்தில் உங்களை முழு மனதோடும் பயபக்தியோடும் பூஜிப்பவர்கள் தங்கள் அருளினால் சகல பாக்கியங்களையும் பெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். இறைவனும் அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்டார்.அதனால் தான் சிவராத்திரி சிவ பூஜைக்கு சிறந்த நாளாகக் கொள்ளப்படுகின்றது.
சிவராத்திரி பற்றி பல கதைகள் மூலமாகவும் சிவராத்திரி மகிமை கூறப்படுகின்றது. ஸ்கந்த புராணத்தில் கூறப்பட்டிருக்கும் ஒரு கதை இவ்வாறு உரைக்கிறது.
குருத்ரோகி என்னும் வேடன் பலரிடம் நம்பிக்கைத் துரோகமாக நடந்து அவப்பெயர் பெற்றான். அவன் மீது கோபம் கொண்ட சிலர் அவனை பகல் முழுவதும் ஒரு சிவன் கோயிலில் அடைத்து வைத்திருந்தனர். இரவில் வேட்டையாடுவதற்காக வேடன் ஓர் நதியை கடந்து அக்கரை சென்றான். தரையில் தன் வலையை விரித்து வைத்துவிட்டு ஏதாவது ஒரு விலங்கு சிக்காதா என்ற எண்ணத்தோடு அருகிலிருந்த ஒரு வில்வ மரத்தின் மீது ஏறி அமர்ந்தான். வலையை வைத்துக் கொண்டே இரவு முழுவதும் கண் வழித்துக் கொண்டிருந்த வேடன் பொழுது போக்காக தான் அமர்ந்திருந்த வில்வ மரத்தின் இலைகளை உருவி கீழே வீசிக் கொண்டிருந்தான். அந்த வில்வ இலைகள் மரத்தடியில் இருந்த ஒரு சிவலிங்கத்தின் மீது வீழ்ந்து கொண்டிருந்தன.
அதிகாலையில் மரத்தை விட்டு இறங்கிய வேடன் முன், சிவகணம் ஒன்று தோன்றி வணங்கி நின்றது. 'நீ யார்? ஏன் என்னை வணங்குகின்றாய்' என்று வேடன் ஒன்றுமே விளங்காமல் கேட்டான்.
வேடரே நேற்று பகல் முழுவதும் சிவன் கோயிலின் சிவ பெருமான் திருவுருவத்தின் முன் இருந்தீர். இன்று இரவு முழுவதும் கண்விழித்து வில்வ இலைகளை பிடுங்கி மரத்தடியில் இருந்த சிவலிங்கத்தைப் பூசித்தர். நேற்று சிவராத்திரியானதால் நீ சிவராத்திரிப் பலனைப் பெறுகிறீர். என்னுடன் வாரும் கைலாயத்துக்குச் செல்லலாம் எனக் கூறி வேடனை மரியாதையுடன் பூத கணம் அழைத்துச் சென்றது. தான் செய்தது அறியாமேல சிவராத்திரி விரதமிருந்த வேடனுக்கே கைலாய வாசம் கிடைத்ததென்றால் சிவராத்திரியின் மகிமை பற்றி சொல்லித் தெரியவேண்டியது இல்லை.
இதனைவிட காத்தல் கடவுளாகிய விஷ்ணுவுக்கும் படைத்தல் கடவுளாகிய பிரமாவுக்கும் இடையில் யார் பெரியவர் என்ற கேள்விக்கு
விடைகாணவேண்டிய தேவை ஏற்பட்டது.இருவருக்குமிடையில் நடந்த வாக்குவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர திருவுளங் கொண்டு அடி, முடி காண முடியாதவாறு ஒளிப்பிழம்பாக சிவன் காட்சியளித்தார். அப்பொழுது இந்த ஒளியின் அடியையும் முடியையும் காண்பவர் எவரோ அவரே பரம்பொருள் என ஓர் அசரீரி கேட்டது. எனவே, அவ்வாறு அடி முடிகாண முடியாது ஆணவம் அடங்கி ஞான ஒளி பெற்ற இரவும் சிவராத்திரி எனப்படுகிறது.
இதைவிட உமாதேவியார் சிவமூர்த்தியின் திருநேத்திரங்களையும் ஒரு முறை மூட உலகங்கள் இருண்டன. அந்தக் கனமே உருத்திரர்கள் இறைவனை வணங்கினார்கள். அக்காலமே சிவராத்திரி என்று புராணங்கள் கூறுகின்றன.
இந்த விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் முழு உபவாசம் இருப்பதுதான் உகந்தது. முடியாதவர்கள் ஒரு வேளை உணவுடன் விரதத்தை மேற்கொள்ளலாம். விரதமிருப்பவர்கள் நாமாவளி சில அஷ்டோத்திரம் மற்றும் சிவ துதிகளைச் சொல்லி வில்வ இலைகளினாலும் உதிரிப் பூக்களினாலும் அர்ச்சனை பண்ண வேண்டும். இரவு முழுவதும் நித்திரை விழித்திருந்து பூஜை செய்ய வேண்டும். சிவன் கோயிலில் நித்திரை விழிப்பதுதான் சிறந்தது. இரவு முழுவதும் நித்திரை விழிக்க முடியாதவர்கள் அர்த்த ஜாமப் பூஜையிலாவது விழித்திருக்க வேண்டும். வில்வ இலையிட்ட நீரை அருந்தி உபவாசமிருந்து சிவபுராணத்தை பாராயணம் செய்வது மிகச் சிறப்பானதாகக் கொள்ளப்படுகின்றது.
மகா சிவாராத்திரி அன்றுதான் நான்கு சாமங்களிலும் ருத்திராபிஷேகம் செய்து வில்வத்தால் சஹஸ்ரநாம அர்ச்சனை செய்ய வேண்டும். அப்படி செய்யும்போது இவ்வுலக சுகமும் மறுமையில் கைலாசமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
மனம் ஒரு நிலைப்பட்டு இறை சிந்தனையோடு புனிதமாக இந்த விரதத்தை மேற்கொண்டால் அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும். சிவனருள் பெற சிவநாமம் சொல்லி விழித்திருந்து விரதமிருந்து பூஜைகளைக் கண்ணாரக் கண்டு புண்ணியந் தேடவேண்டும். சிவ விரதம் மிகச் சிறப்புவாய்ந்தது.