பாகிஸ்தான் ஜனாதிபதி பேர்வேஷ் முஷாரப் பதவி விலகமாட்டாரெனவும் ஆட்சி அமைக்கப் போகும் புதிய அரசுடன் இணைந்து செயற்படுவாரெனவும் முஷாரப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த 18 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் முஷாரப்புக்கு ஆதரவான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (கியூ) கட்சி படுதோல்வியடைந்த நிலையில் முன்னாள் பிரதமர்களான பெனாசிர் பூட்டோ நவாஸ் ஷெரீப் ஆகியோரின் கட்சிகள் இவ்வாரமளவில் ஆட்சி அமைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய அரசு, ஜனாதிபதி முஷாரப்புக்கு எதிராக பாராளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் கொண்டு வந்து அவரை பதவி நீக்கம் செய்யும் என்று பரவலாக பேசப்பட்டது. அத்தகைய சூழ்நிலையைத் தவிர்ப்பதற்காக முஷாரப்பே பதவி விலகி விடுவார் என்றும் கருதப்பட்டது.
இந்நிலையில், முஷரப்பின் செய்தித் தொடர்பாளரும் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியுமான ரஷித் குரேஷி, இந்த இராஜிநாமா வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில்;
`முஷாரப் ராஜிநாமா செய்வார் என்று வெளியான செய்தி தவறானது. அடிப்படை அதாரமற்றது. அவர் பதவி விலக மாட்டார். புதிய அரசுடன் இணைந்து செயற்படுவார். அதுபோல், தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகளும் முஷாரப்புடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளன. நவாஸ் ஷெரிப் கட்சி மட்டுமே முஷரப்புடன் இணைந்து பணியாற்ற எதிர்ப்பு தெரிவிக்கிறது.
நவாஸ் ஷெரிப்பும் அவரைச் சுற்றியுள்ள 100-200 பேர் கொண்ட கும்பலும் மட்டுமே முஷாரப் பதவி விலக வேண்டும் என்று கோரி வருகின்றார்கள். முஷாரப்புடன் இணைந்து பணியாற்ற முடியாதென்று நவாஸ் ஷெரிப் திம்பத் திரும்ப கூறி வருகிறார். இதில் வேடிக்கை என்னவென்றால், அவர் தேர்தலில் போட்டியிடவும் இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்படவும் இல்லை.
மேலும் பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளை மீண்டும் பணியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு பெனாசிர் கட்சியை முஷாரப் கேட்டுக்கொண்டதாகவும் செய்தி வெளியாகி உள்ளது. இதுவும் பொய்யான செய்தி. இதில் உண்மை இல்லை. பெனாசிர் கட்சியும் இதை மறுத்துள்ளது.
பத்திரிகையாளர்கள், ஜனாதிபதியை பற்றி செய்தி வெளியிடும் போது, அச் செய்தியை உறுதிப்படுத்திய பிறகே வெளியிட வேண்டும். இதற்காக அவர்கள் என்னை எப்போது வேண்டுமானாலும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்கலாம். அதுதான் பத்திரிகைகளுக்கான நன்னடத்தை. தவறான செய்தி வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.