ஜேர்மனியில் ஹிட்லரின் நாஜிப்படையினர் புதைத்து வைத்ததாகக் கூறப்படும் இரண்டாயிரம் கிலோ தங்கப் புதையலைத் தேடும் பணியில் புதிய திருப்பமாக குகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலகின் எட்டாவது அதிசயமாகக் கருதப்பட்ட தங்க மாளிகை, ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகர் அருகே உள்ள கேத்தரின் அரண்மனையில் இருந்தது.
17 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட இந்தத் தங்க மாளிகையில் பொருட்கள் மற்றும் அலங்காரங்கள் முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்டன.
இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஹிட்லரின் நாஜிப்படையினர் இங்கு ஊடுருவி, 2 ஆயிரம் கிலோ தங்கப் பொருட்களையும் கொள்ளையடித்து ஜேர்மனிக்குத் திரும்பினர். பின் தோல்விப் பயத்தால், டெட்ஸ்சுனுடார்ப் மலைப் பகுதியில் ஒரு குகைக்குள் தங்கத்தை மறைத்து வைத்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், நாஜி தங்கம் எங்கே இருக்கிறது என்பது பற்றிய தகவல் பல ஆண்டுகளாக மர்மமாகவே இருந்து வந்தது.
கடந்த 1882 ஆம் ஆண்டு மூடப்பட்ட தாமிரச் சுரங்கத்திலுள்ள நாஜி தங்கம் பாதுகாக்கப்பட்டிருந்ததாக சில முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இந்தப் புதையலைப் பாதுகாக்கப்பதற்காக, அப்போது இந்த மலைப்பகுதியில் ஹிட்லரின் வீரர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
அவர்கள் பயன்படுத்திய சீருடைகள், துப்பாக்கிகள், வெடிமருந்துப் பொருட்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
நாஜிப் படையின் தங்கப் புதையலைத் தேடும் பணியின் ஹென்ஸ் பீட்டர் ஹாஸ்டின், கிறிஸ்டியன் ஹேனிஸ் என்ற இருவர் தற்போது தீவிரமாக இறங்கியுள்ளனர்.
இதில் கிறிஸ்டியன் ஹேனிஸ் என்பவரின் தந்தை நாஜி விமானப்படையில் பணியாற்றியவர். ரஷ்யாவில் கொள்ளையடித்த தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை மறைத்து வைக்கும் பணியில் ஈடுபட்டவர். இவர் தனது மகனிடம் இதுபற்றி சில தகவல்களை மட்டும் கூறியுள்ளார். தந்தையின் மறைவுக்குப் பிறகு, தங்கப் புதையலை கண்டுபிடிக்கும் பணியில் கிறிஸ்டியன் ஹேனிஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.கடந்த 12 ஆண்டுகளாக இந்த முயற்சியில் ஹாஸ்டின் மற்றும் ஹேனிஸ் ஆகியோர் ஈடுபட்டனர். தற்போது நவீன கருவிகளுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதில் குகை போன்ற அமைப்பு மலைப்பகுதிகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் நிச்சயமாக தங்கப் புதையலைக் கண்டுபிடித்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் இவர்கள் தற்போது தேடுதலை தீவிரப்படுத்தியுள்ளனர்.