அணுசக்தி ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதற்கு இந்தியாவுக்கு அமெரிக்கா ஒரு மாத காலக்கெடுவை விதித்துள்ளது.
இந்தியா - அமெரிக்கா இடையே ஏற்பட்ட அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்துக்கு, எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி காங்கிரஸ் கூட்டணி கட்சிகளான இடதுசாரி கட்சிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இதனால், இந்த ஒப்பந்தம் அமுல்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அணுசக்தி ஒப்பந்தத்தை ஒரு மாதத்திற்குள் அமுல்படுத்த வேண்டுமென்று, இந்தியாவுக்கு அமெரிக்கா கெடு விதித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவின் அரசியல் விவகார அமைச்சர் நிக்கோலஸ் பேர்ண்ங் தெரிவித்துள்ளதாவது;
இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் மார்ச் மாதத்திற்குள் அணுசக்தி விநியோக நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். சர்வதேச அணுசக்தி கழகத்தின் அனுமதி உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் முடிவடைந்த பிறகு, ஒப்பந்தத்துக்கு அமெரிக்க பாராளுமன்றத்தின் இறுதி ஒப்புதலைப் பெற வேண்டிய தேவை இருக்கிறது, வருகிற ஜூலை மாதத்தில் அமெரிக்க பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைவதால், ஒப்பந்தத்துக்கு இந்தியா அனுமதி வழங்கி அமுல்படுத்துவதற்கான நேரம் நெருங்கிவிட்டது.
கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பை மீறி, ஒப்பந்தத்துக்கு ஆதரவாக இன்னும் 30 நாட்களுக்குள் இந்தியா முடிவு எடுக்க வேண்டும். கடந்த வாரம் டெல்லி சென்ற அமெரிக்க எம்.பி.ஜோசப் பிடனும் இந்த கெடு பற்றி குறிப்பிட்டு இருந்தார். இந்தியாவுடன் பல்வேறு துறைகளில் நல்லுறவை விரிவுபடுத்துவதில் அமெரிக்கா அக்கறை கொண்டுள்ளது. ஆனால், அணுசக்தி ஒப்பந்தம் அமுலுக்கு வருவதன் அடிப்படையில்தான் இது அமையும்." என பேர்ண்ஸ் தெரிவித்தார்.
அத்துடன் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், அணுவாயுத போட்டி நாடுகளான இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அமைதியான நல்லுறவு நீடிப்பது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.