தெற்காசிய நாடுகளுக்கிடையிலான உதைபந்தாட்ட சாம்பியன் போட்டி எதிர்வரும் ஜூன் மாதம் மாலைதீவிலும் இலங்கையிலும் நடைபெறவுள்ளது.
மேற்படி சாம்பியன் போட்டியின் ஆரம்பவைபவம் ஜூன் மாதம் 3 ஆம் திகதி மாலைதீவில் நடைபெறும். இப்போட்டியில் இலங்கை இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவு, நேபாளம், பங்களாதேஷ், பூட்டான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் பங்கு பற்றுகின்றன.
இவை இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறும். ஏ-பிரிவு : இந்தியா, நேபாளம், மாலைதீவு, பாகிஸ்தான்
பி-பிரிவு : இலங்கை, பங்களாதேஷ், பூட்டான், ஆப்கானிஸ்தான்
ஏ-பிரிவு ஆட்டங்கள் மாலைதீவிலும் பி-பிரிவு ஆட்டங்களும் இறுதி ஆட்டங்களும் இலங்கையிலும் நடைபெறும்.
ஆரம்ப நாளான ஜூன் 3 ஆம் திகதி, இந்தியா எதிர் நேபாளமும் மாலைதீவு எதிர் பாகிஸ்தான் அணிகளும் போட்டியிடும். இப்போட்டிகள் மாலைதீவில் நடைபெறும்.
ஜூன் 4 ஆம் திகதி கொழும்பு சுகததாச, விளையாட்டு அரங்கில், பங்களாதேஷ் எதிர் பூட்டான் அணிகளும், இலங்கை எதிர் ஆப்கானிஸ்தான் அணிகளும் போட்டியிடும்.
ஜூன் 5 ஆம் திகதி இந்தியா எதிர் பாகிஸ்தான் அணிகளும் நேபாளம் எதிர் மாலைதீவு அணிகளும் போட்டியிடும்.
ஜூன் 6 ஆம் திகதி பங்களாதேஷ் எதிர் ஆப்கானிஸ்தான் அணிகளும் இலங்கை எதிர் பூட்டான் அணிகளும் போட்டியிடும்.
அரை இறுதி ஆட்டங்கள் ஜூன் மாதம் 11 ஆம் திகதி மாலைதீவிலும் கொழும்பிலும் நடைபெறும்.
இந்த அரை இறுதி ஆட்டங்களில் ஏ-பிரிவில் வெற்றி பெறும் அணியும், பி-பிரிவில் 2 ஆம் இடத்தைப் பெறும் அணியும் மாலைதீவில் போட்டியிடும்.
2 ஆவது அரை இறுதி ஆட்டத்தில் பி-பிரிவில் வெற்றி அணியும் ஏ-பிரிவில் 2 ஆம் இடத்தைப் பெற்ற அணியும் போட்டியிடும். இப்போட்டி கொழும்பில் நடைபெறும்.
மேற்படி இரு அரை இறுதி ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற அணிகளுக்கிடையிலான, இறுதி ஆட்டமும் 3 ஆம் இடத்துக்கான ஆட்டமும் ஜூன் 4 ஆம் திகதி கொழும்பில் நடைபெறும்.
இம்முறை இப்போட்டியில் சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றும் அணிக்கு 50 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்படும்.
தெற்காசிய நாடுகளுக்கிடையிலான 1 ஆவது போட்டி 1993 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் லாகூர் நகரில் நடைபெற்றது. இப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, இலங்கை அணியை 1-0 கோல்களினால் வெற்றி பெற்று சாம்பியன் கிண்ணத்தை முதல் தடவையாக கைப்பற்றியது.
2 ஆவது போட்டி 1995 ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்றது. இதன் இறுதி ஆட்டத்தில் இலங்கை அணி இந்திய அணியை 1-0 கோலினால் தோற்கடித்து முதல் தடவையாக சாம்பியன் கிண்ணத்தைக் கைப்பற்றியது.
3 ஆவது போட்டி 1997 ஆம் ஆண்டு நேபாளத்தின் தலைநகரான காத்மண்டுவில் நடைபெற்றது. இதன் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, மாலைதீவு அணியை 5-1 கோல்களினால் வெற்றி பெற்று சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது.
4 ஆவது போட்டி 1999 ஆம் ஆண்டு இந்தியாவின் கோவா நகரில் நடைபெற்றது. இதன் இறுதி ஆட்டத்தில், இந்திய அணி, பங்களாதேஷ் அணியை 2-1 கோல்களினால் வெற்றி பெற்று சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது.
5 ஆவது போட்டி பங்களாதேஷின் டாக்கா நகரில் நடைபெற்றது. இதன் இறுதி ஆட்டத்தில் பங்களாதேஷ் அணி மாலைதீவு அணியை 2-1 கோல்களினால் வெற்றி பெற்று முதல் தடவையாக சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது.
6 ஆவது போட்டி 2005 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் கராச்சி நகரில் நடைபெற்றது. இதன் இறுதி ஆட்டத்தில், இந்திய அணி, பங்களாதேஷ் அணியை 2-0 கோல்களினால் வெற்றி பெற்று சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது.
தெற்காசிய நாடுகளிடையே இதுவரை நடைபெற்று முடிந்த 6 சாம்பியன் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகளில், இந்திய அணி 4 தடவைகள் சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றி சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.