19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் உலக கிண்ணத்தை இந்திய அணி சுவீகரித்துள்ளது.
மலேசியாவில் நடைபெற்று வந்த 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதின.
நேற்று ஞாயிற்றுக்கிழமை பகலிரவுப் போட்டியாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 45.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 159 ஓட்டங்களை எடுத்தது.
இந்திய அணி சார்பாக துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக ஷ்ரீவஸ் தவா 46 ஓட்டங்களை எடுத்தார். தென்னாபிரிக்க அணியின் பந்து வீச்சில் பர்னெல், ஆர்னோல்ட், அடம்ஸ் மூவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
தென்னாபிரிக்க அணி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த போது மழை குறுக்கிடவே டக்வேர்த் லூயிஸ் முறைப்படி 25 ஓவர்களில் 116 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டது. எனினும், 25 ஓவர்கள் நிறைவில் தென்னாபிரிக்க அணியினர் 8 விக்கெட்டுகளை இழந்து 103 ஓட்டங்களை மட்டுமே எடுத்தனர்.
இதன் பிரகாரம் இந்திய அணி 12 ஓட்டங்களால் வெற்றி பெற்றதுடன், அவ்வணி சார்பில் பந்து வீச்சில் ஆர்கல், ஜடேஜா. கௌல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாக இந்திய அணியின் ஆர்கல் தெரிவானார்.