அவுஸ்திரேலியாவில் நடைபெறும் முக்கோண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் இறுதியாட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை தோற்கடித்துள்ளது.
240 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 45.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 242 ஓட்டங்கள் எடுத்து முதல் இறுதியாட்டத்தில் வெற்றி பெற்றது.
மூன்று இறுதியாட்டங்களைக் கொண்ட இந்தப் போட்டியில் முதல் இறுதியாட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை சிட்னியில் நடைபெற்றது.
இந்தியாவுக்கு எதிரான இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் ஆடிய அவுஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 239 ஓட்டங்கள் எடுத்தது. இதில் கில்கிறிஸ்ட் 7, ஹைடன் 82, பொன்டிங் 1, கிளார்க் 4, சைமன்ட்ஸ் 31, ஹஸி 45, ஹோப்ஸ் 15, பிரட்லீ 17 ஓட்டங்களை எடுத்திருந்தனர்.
முதல் மூன்று விக்கெட்டுகளையும் அவுஸ்திரேலிய அணி 24 ஓட்டங்களுக்குள் இழந்த நிலையில் ஹைடன், சைமன்ட்ஸ் ஜோடி நூறு ஓட்டங்களைப் பெற்று அணியை ஓரளவு வலுவான நிலைக்குக் கொண்டுவந்ததும் குறிப்பிடத்தக்கது.
பந்துவீச்சில் ஹர்பஜன்சிங், பிரவீண் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் இஷாந்த் சர்மா, இர்பான் பதான், யுவராஜ் சிங் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
வெற்றிபெற 240 ஓட்டங்கள் எடுக்க வேண்டுமென்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 45.5 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்து முதல் இறுதியாட்டத்தில் வெற்றி பெற்றது.
துடுப்பாட்டத்தில் உத்தப்பா 17, காம்பீர் 3, யுவராஜ் சிங் 10, ரோஹித்சர்மா 66 ஓட்டங்கள் எடுத்தனர். டெண்டுல்கர் 117 ஓட்டங்களுடனும் தோனி 15 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். சச்சினும் ரோஹித்சர்மாவும் இணைந்து நான்காவது விக்கெட் ஜோடியாக 123 ஓட்டங்களைப் பெற்று இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.
பந்துவீச்சில் ஹோப்ஸ் 2 விக்கெட்டுகளையும் ஹொக் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
அவுஸ்திரேலியாவில் ஒருநாள் போட்டியில் சச்சின் சதம் அடிப்பது இதுவே முதன்முறையாகும். 2 ஆவது இறுதியாட்டம் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறும்.