Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, March 30, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
 
பக்கம் - 02
 
தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள பிரபாகரன் - (தொடர்ச்சி)
கலைஞன்

பிரபாகரன் திரைப்படத்தை வெளியிட வேண்டுமென்பதில் ஹம்சா தீவிரமாக செயற்பட்டு வரும் நிலையில் இலங்கையின் துணைத் தூதுவர் ஹம்சாவையும் இலங்கைத் துணைத் தூதரகத்தையும் தமிழகத்திலிருந்து வெளியேற்றுமாறு வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் தலைமையில் கடந்த வியாழக்கிழமை பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

ஆர்ப்பாட்டங்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்த போதும் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தை தடுப்பதற்கு தமிழக அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்பகுதிகளில் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன் இலங்கைத் துணைத் தூதரகத்தை சுற்றியும் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. பொலிஸார் ஆர்ப்பாட்டத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

இவ்வளவு தூரத்துக்கு தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்திய ்பிரபாகரன்ீ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளைப் பார்ப்போம்.

வகுப்பில் ஆசிரியரொருவர் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். மாணவர்கள் பாடத்தில் உன்னிப்பாக கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றனர். அப்போது திடீரென ஆயுதங்களுடன் சில போராளிகள் ஆவேசமாக வகுப்பறைக்குள் நுழைகின்றனர்.

அதேவேகத்தில் அங்கிருந்த மாணவர்களை இழுத்துக் கொண்டு வெளியேறுகின்றார்கள். பதறிப்போன ஆசிரியர் ஆயுததாரிகளிடமிருந்து மாணவர்களை மீட்கமுயல அவர் கடுமையாக தாக்கப்படுகின்றார். இதனால் அவர் மயக்கமாகி விழுகின்றார். இது ஒருகாட்சி.

வாகனம் ஒன்றில் வலுக்கட்டாயமாக ஏற்றப்படுகின்றான் ஒரு சிறுவன். அழுதபடியே ஏறி அமர்கின்றான் அந்தச் சிறுவன். புழுதியைக் கிளப்பியபடி வாகனம் புறப்படுகின்றது. மின்னல் வேகத்தில் புறப்பட்ட இந்த வாகனம் ஒரு காட்டுப் பகுதியை அடைகிறது.

அங்கு அதிகாலை நேரம் சிறுவர்களுக்கு ஆயுதப் பயிற்சி நடந்து கொண்டிருக்கிறது. நடுவில் அமர்ந்திருக்கும் சிறுவன் தூக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அமர்ந்தபடியே சாய்கிறான். சட்டென்று விழித்துக் கொண்டு மீண்டும் பயிற்சியில் ஈடுபடுகின்றான். இது இன்னொரு வகைக் காட்சி.

பயிற்சியின்போது சிறுவன் ஒருவன் மீது சுடு தண்ணீரை ஊற்றி அடித்து மிரட்டுகின்றனர். தூங்கியும் அரைத் தூக்கத்திலும் பயிற்சியில் ஈடுபடுகின்றான். கொஞ்சமும் விருப்பமில்லாமல் அழுதபடியே துப்பாக்கி சுடுவதற்கு கற்றுக் கொள்கிறான். கண்ணை மூடியபடியே இலக்கை சரியாக சுட்டுக் காட்டுகிறான். இது இன்னொரு வகை.

ஒரு பெண்ணை தற்கொலைப் போராளியாக தயார்படுத்துகிறார் ஓர் இளைஞர். கொஞ்சமும் விருப்பமில்லாமல் விம்மி வெடித்து அழுதபடியே தற்கொலைப்படை போராளிக்கான உடையை அணிந்து கொள்கிறாள் அந்தப் பெண். இப்படி ஏகப்பட்ட காட்சிகள்.

திரைப்படத்தின் ஆரம்பத்திலேயே இலங்கை அரசாங்கத்துக்கும் இராணுவத்திற்கும் நன்றி தெரிவிக்கப்படுகின்றது.

்நம்முடைய அன்னை பூமியில் தொலைந்துபோன அமைதியை மீட்டெடுக்க எத்தனையோ முயற்சிகள் எடுத்தும் தொடர்ந்தும் யுத்த பூமியாகவே நீடிக்கிறது. உயிர்ப்பலிகள் தொடர்கதையாக இருக்கின்றன. இந்தத் தொடர் சோகத்துக்கு யாரைக் குற்றம் சொல்வது? நிச்சயமாக சிங்கள மக்களோ அல்லது தமிழ் மக்களோ அல்ல. அவர்கள் இருவருமே நடுவில் சிக்கிக் கொண்டு தவிப்பவர்கள்? என்ற அறிமுக உரையோடு இந்தப் படம் தொடங்குகின்றது.

படத்துக்கான கதையும் புலிகளிடமிருந்தே ஆரம்பிக்கின்றது. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஆர்வத்தின் காரணமாக இணைந்து தற்கொலைப் போராளியாக வளர்ந்த ஒருவன் எப்படி அந்த அமைப்பின் பிடியிலிருந்து விலகி வெளியே வருகிறான். அதற்காக அவனை தூண்டியவை எவை? என்பனவற்றை அடிப்படையாக வைத்தே கதை நகருகின்றது. வன்னி, வவுனியா போன்ற காட்டுப் பகுதிகள்தான் கதைக்களம்.

இந்தப் படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு காட்சியும் விடுதலைப் புலிகளின் முகத்தை கோரமாக வெளிப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளன. முக்கியமான யுத்தக் காட்சிகளில் இலங்கை இராணுவத்தின் உதவியுடன் நிஜமான போர்க் கருவிகளே பயன்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் அனைத்து காட்சிகளும் இலங்கை அரசின் பார்வையிலிருந்து எடுக்கப்பட்டவையாகவேயுள்ளன.

இவ்வாறான நிலையில் புலிப் போராளிகளாலும் அவர்களின் ஆதரவாளர்களினாலும் தமிழகத்தில் நெருக்கடியைச் சந்தித்து வந்த அரசுக்கு தற்போது ்பிரபாகரன்ீ ரூபத்தில் புதிய தலைவலி வந்துள்ளதால் அதனைக் கையாளும் வழிமுறை தெரியாமல் தமிழக பொலிஸாரும் உளவுப் பிரிவான ்றோீ வினரும் மேற்கொண்ட நடவடிக்கைகள் இவர்கள் தொடர்பில் இலங்கையிலும் கடும் அதிருப்தியையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் தமிழர்களின் போராட்டத்துக்கும் எதிராக இலங்கையரசின் உதவியுடன் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் இறுதியில் தமிழகத்தில் பிரபாகரனுக்கும் அவர்களின் விடுதலைப் போராட்டத்துக்குமான ஆதரவை அதிகரிக்க வைக்கும் படமாக அமைந்து விட்டதே உண்மை !

Email this page Your Opinion Print this page
கொசோவோ சுதந்திரப் பிரகடனமும் ஈழத் தமிழர்களின் போராட்டமும் -(தொடர்ச்சி)
ச.பா.நிர்மானுசன்

மற்றைய உதாரணம் இலங்கைத் தீவுடன் தொடர்புடையது. ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் இந்தியாவுக்கான விஜயத்திற்கு இன்னொரு பக்கம் உண்டு. அதிலும் ஆழமான இராஜதந்திரம் பொதிந்துள்ளது. தமிழ்த் தரப்பினர் அதனை தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையாக பார்த்தார்கள். அதைனயும் தாண்டிய விடயங்கள் என்னவெனில், ஸ்ரீலங்கா இராணுவத் தளபதிக்கு தனது நாட்டில் சிறந்த வரவேற்புக் கொடுத்து காஷ்மீர் வரை கூட்டிச் சென்றதனூடாக ஸ்ரீலங்காவுடன் மிக நெருக்கமான உறவை வலுப்படுத்தி வரும் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் "செயற்பாட்டு ரீதியான சேதி" அடித்து கூறப்பட்டுள்ளது. மற்றும் காஷ்மீருக்கு இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை அழைத்து சென்றதனூடாக ஆயுத போராட்டத்தில் அனுபவம் உடைய ஒருவரின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது. அதனை காஷ்மீர் ஆயுதப் போராட்டத்துக்கு எதிராக எதிர்கால திட்டமிடல்களில் உட்படுத்தலாம். அத்துடன், தனது எதிர்பார்ப்புகளிலிருந்து விலகிச்செல்லும் ஸ்ரீலங்காவுக்கு கடிவாளம் போடும் நடவடிக்கைக்கு வழியமைத்தல் போன்ற அம்சங்கள் "அமர்க்கள வரவேற்புக்குள்" புதைந்து போயிருந்தன.

அத்தகைய பல்வேறுபட்ட தேசியநலனை அடிப்படையாகக் கொண்ட இராஜதந்திர நகர்வுகள் தொடர்கிறது. அதுவே பூகோள அரசியல் மற்றும் புதிய உலக ஒழுங்கின் நிர்ணயிப்பு சக்தியாக விளங்குகிறது.

ஆகவே, சுயநிர்ணய உரிமை வேண்டி நிற்கும் தேசங்கள் மேற்கூறிய சூட்சும சுழற்சிக்குள் விரைவாக, விவேகமாக தம்மை உட்படுத்துவது அவர்களின் சுதந்திரம் நோக்கிய பயணத்தை இலகுபடுத்தும்.

Email this page Your Opinion Print this page
கிழக்குத் தேர்தல்: கதைகளும் கட்டுக் கதைகளும்!- (தொடர்ச்சி)
எவ்வாறிருந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது கிழக்குத் தேர்தலில் போட்டியிடாது என்கின்ற செய்தியானது இப்போதைக்கு மு.காங்கிரஸினருக்கே மிகப்பெரும் ஏமாற்றமாகவும், இழப்பாகவும் இருக்கும். ஏனெனில், இத்தேர்தலின் பின்னர், முஸ்லிம் காங்கிரஸுக்கு ஆட்சியொன்றை அமைப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டு, அது குறைந்தளவு ஆசனப் பற்றாக்குறையால் நழுவிப்போகும் நிலையொன்று ஏற்படுமானால், அதன்போது, த.தே.கூட்டமைப்பினரின் ஆதரவினைப் பெற்று ஆட்சியமைக்கலாம் எனும் எண்ணப்பாடொன்றும் மு.காங்கிரஸுக்கு இருந்தது! ஆனால், அந்த எண்ணத்தில் இப்போது விழுந்திருக்கிறது மண்! தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிடும் என கடைசி நேரத்திலாவது அறிவிக்க மாட்டாதா என்று இப்போதைக்கு அதிகமாக ஆசைப்படுவதும், அவ்வாறு அறிவித்தால் மிக அதிகமாகச் சந்தோஷம் கொள்வதும் மு.காங்கிரஸாகத்தான் இருக்கும் என்று கூறலாம்! தப்பில்லை!!

இதேவேளை, தேர்தலுக்குப் பின்னர் மு.கா. ஏனைய கட்சிகளுடன் கூட்டினை ஏற்படுத்தி ஆட்சியமைக்க முயலுமா என்று அக்கட்சியின் தவிசாளர் பசீரைக் கேட்டால், மு.கா.வின் நிபந்தனைகளுக்கு உடன்பட்டால், பொ.ஜ.முன்னணியுடன் கூட நாம் இணைந்து செயற்படத் தயாராகவே இருக்கின்றோம் என்கிறார். மேலும், இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டப் பேர் ச்சுவார்த்தைகள் கடந்த காலங்களில் இடம்பெற்றவேளை, முஸ்லிம் தரப்பு ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளப்படவில்லை. அப்பேச்சுவார்த்தைகளின்போது, மற்றத்தரப்பினருக்கு வழங்கப்பட்டவை சௌகரியமான இருக்கைகள் எனக்கொண்டால், முஸ்லிம் சமூகத்துக்கு வழங்கப்பட்டதோ சில வாகனங்களில் இருப்பன போன்ற பேபி சீட் (குழந்தைகளுக்கான இருக்கை) களேயாகும்! ஆக கிழக்கு மாகாணசபை தேர்தலில் மு.கா. பெறும் வெற்றி மூலம், முஸ்லிம் சமூகத்தின் பலத்தை நிரூபித்து, சம அந்தஸ்த்தைக் கோருவதே தமது நோக்கமாகும் என்றும் பசீர் நம்மிடம் தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க, அபேட்சகர்களைத் தெரிவு செய்யும் விடயம்தான் மு.காங்கிரஸின் தலைமைக்குள்ள தற்போதைய தலைவலி; என்று கூறப்படுகிறது! கட்சிக் கொடி நடுவதற்காக மடுத் தோண்டியவர்களிலிருந்து, கட்சிக்காகபப் பல வழிகளிலும் உழைத்தவர்கள் வரை என்று, பலர் இத் தேர்தலில் தாங்களும் போட்டியிட வேண்டுமென்று தலைவரிடம் ஒற்றைக் காலில் தவம் கிடப்பதாக உள்ளிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் மு.காங்கிரஸ் தனது வேட்பாளர்களை ஒவ்வொரு பிரதேசத்துக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் (இரண்டு அல்லது அதற்கும் அதிகமாக) நிறுத்தவுள்ளதாகவும், ஆனால் - நிந்தவூர் பிரதேசத்தில் ஒரு வேட்பாளரை மட்டுமே களமிறக்கவுள்ளதாகவும் வாய்வழிச் செய்தியொன்றின் மூலமாக அறிய முடிகிறது. இருந்தபோதும் இச்செய்தியின் உண்மைத் தன்மை குறித்து நம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை. எனினும் இவ்வாறான செயற்பாடொன்று மேற்கொள்ளப்பட்டால், நிந்தவூரில் போட்டியிடும் மு.கா. அபேட்சகரின் வெற்றியை மிகவும் இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை பல் முளையாக் குழந்தையும் சொல்லும்! ஏற்கனவே, மு.காங்கிரஸ் சார்பாக நிந்தவூருக்கு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், அங்கு மாகாணசபை உறுப்பினர் ஒருவரையும் பெற்றுக் கொள்வதற்கான குறுக்கு வழி முயற்சியே மேற்படி திட்டமாகும் என்று கோபப்படுகிறார் இச்செய்தியை நம்மிடம் தெரிவித்த நபர்! இதேவேளை, மு.காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஹசன் அலியும் நிந்தவூர்காரர் என்பது இங்கு அடிக்கோடிட்டு சொல்ல வேண்டிய தகவலாகும்!

நமது ஞாயிறு தினக்குரல் கட்டுரைகளைத் தொடர்ந்து படித்துவரும் ஊடக நண்பரொருவர், இந்தக் கிழமை என்ன விடயம் பற்றி கட்டுரை வருகிறதுீஎன்று கேட்டார். ிகிழக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக அலசும் கட்டுரையொன்றை எழுதுவதாக உத்தேசம் என்றேன்! சற்றே நக்கல்தனமாகச் சிரித்த நண்பர் "நீங்கள் பெரிதாக ஒன்றும் அலசி ஆராயவெல்லாம் வேண்டாம். இத்தனை பாடுபட்டு கிழக்கைப் பிரித்தெடுத்துள்ள அர சாங்கம், அங்கு அவசர அவசரமாகத் தேர்தலொன்றை நடத்துவது, தோற்பதற்கோ அல்லது எதிராளிகளிடம் ஆட்சியைக் கொடுப்பதற்கோ அல்ல ஓய்.... கிழக்குத் தேர்தலில் அரசாங்கம் ிஎன்ன விலை கொடுத்தாயினும் வெல்லும்" என்றார்!ீ ிஎன்ன விலை கொடுத்தாயினும்ீ என்கின்ற வாக்கியத்தை கூறும் போது, நமது நண்பர் தெரிந்தோ தெரியாமலோ, சற்று அழுத்தியே உச்சரித்தார்!

Email this page Your Opinion Print this page
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com