|
மாற்றங்கள் வாழ்வின் உண்மை நிலையாகும். எனினும், வாழ்வின் அடிப்படையான தொன்றுள்ளது, அது மாற்றமடைவதில்லை என மஹராஜி கூறுகின்றார். அவர் உலகெங்கும் உள்ள பார்வையாளர்களிடம்,ஒவ்வொருமனிதரினுள்ளேயும் உள்ள அந்த அமைதியை தொடர்ச்சியாக அனுபவிப்பதற்கு உள்ள சாத்தியம் பற்றி உரையாற்றி வருகின்றார்.
"உங்களிடம் சிறு படகொன்றிருப்பதாகவும்,நீங்கள் அதனை ஏதோ ஒன்றில் கட்டிவைக்க விரும்புவதாகவும் கற்பனை செய்யுங்கள். ஏனெனில், நீங்கள் மிகவும் தெளிவான நீரைக் கொண்டதும் அழகானதுமானதொரு கடற்கரையில் உள்ள துறைமுகம் ஒன்றை அடைந்திருக்கிறீர்கள்" என அவர் கூறுகின்றார். நீங்கள் அந்த இடத்தில் சிறிது நேரத்தைச்செலவு செய்து சிறு விருந்தொன்றை நடத்த விரும்புகின்றீர்கள்.அங்கு காற்றுப் பலமாக வீசிக்கொண்டிருப்பதுடன், சுற்றிவர கற்பாறைகளும் உள்ளன. நீங்கள் உங்கள் படகு கற் பாறையில் மோதுவதை விரும்பவில்லை. நீங்கள் உங்களுடன் "ஸ்ரைறொபோம்" என்னும் மிதவையையும் கயிற்றையும் கொண்டு வந்திருக்கிறீர்கள். "ஸ்ரைறொபோம்" தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது. நீங்கள் உங்கள் படகை அதில் கட்டினீர்கள். உங்கள் படகு பாதுகாப்பாக உள்ளதாக நீங்கள் சந்தோஷமடைந்தீர்கள்.
எல்லாமே சரியாக உள்ளதா? அங்கே ஏதாவது சிக்கல்கள் உள்ளதா? அங்கே பெரிய பிரச்சினைகள் உள்ளன. அந்த மிதவை நீரினால் அடித்துச் செல்லப் படக் கூடியதாகையால் படகும் நீரினால் அடித்துச் செல்லப்படப் போகின்றது. அந்தப் படகு அடித்துச் செல்லப்படுவதை நீங்கள் விரும்பாவிட்டால் நீங்கள் அப்படகை நீரினால் அடித்துச் செல்லப்படாத ஒன்றில் கட்டி வைக்கவேண்டும். அதற்காகத்தான் மக்கள் நங்கூரத்தை வைத்திருக்கின்றார்கள். அவர்கள் நங்கூரத்தை கீழே போட்டு அது அசையாத ஒன்றில் தரித்திருக்கின்றதா என்பதைப் பார்க்க அதை இழுத்துப் பார்ப்பார்கள்.
அதேபோல மக்களுக்கும் அவர்கள் வாழ்வில் நங்கூரம் ஒன்று தேவை என மஹராஜி கூறுகின்றார்.
"உங்கள் வாழ்வில் அடித்துச் செல்லப்படாத விடயம் எது" என மஹராஜி கேட்கின்றார். சகலதும் மாற்றமடையப் போகின்றது. அவை மாற்றமடைவதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். ஆனால், அவை மாற்றமடையப் போகின்றன. உங்கள் முகம் மாற்றமடையப் போகிறது. உங்கள் எண்ணக் கருத்துகள் மாற்றமடையப் போகின்றன. நீங்கள் விடயங்களைக் காணும் உங்கள் கண்ணோட்டம் மாற்றமடையப் போகின்றது. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் உலகின் தன்மை இப்படிப் பட்டதுதான்.
அடித்துச் செல்லப்படாத விடயம் என்ன ? இதற்கான பதிலை நீங்கள் கண்டுகொள்ள வேண்டுமாயின் உங்கள் உண்மையான தன்மையை நீங்கள் கண்டு கொள்ள வேண்டும்.
மஹராஜி அவர்கள் சிறு பராயத்தினராக, இந்தியாவில் இருந்த காலத்தில் இருந்தே இந்த உண்மையான விடயம் பற்றி உரையாற்றி வருகின்றார். அதைத் தேடுவதில் ஆர்வமாக உள்ளவர்களுக்கு அவர் தனது உதவியை வழங்கி வருகின்றார்.
இப்பொழுது நாம் மிக அற்புதமானவை என எண்ணும் சகல தொழில் நுட்பங்களும் மாற்றமடையும் என மஹராஜி கூறுகின்றார். ஆனால், உங்களிடம் ஏதோ ஒன்றுள்ளது. அது மாறுதல் அடைவதில்லை. ஆனந்தத்தை உணர்வதற்கான அந்தச் சாத்தியம் மாறவில்லை. அமைதியை உணர்வதற்கான சாத்தியம் மாறவில்லை. எளிமையை உணர்வதற்கான சாத்தியம்,ஆனந்தத்தை உணர்வதற்கான சாத்தியம் மாறவில்லை.
இந்தப் பூமியின் கண் மனிதர்கள் இருக்கும் வரை அது மாற்றமடையாது. இப்படியானவர்கள் தான் நாம்.
கேள்வி: இந்த மாற்றமடையாத விடயத்தை நாம் எப்படிக் கண்டுகொள்ள முடியும்.
பதில்: நீங்கள் எதைத் தேடுகின்றீர்களோ அது உங்கள் உள்ளேதான் உள்ளது. எமக்கு வேதனை தரும் விடயங்களில் தன்னிச்சையான வெறுப்பும் ஆனந்தத்தில் தன்னிச்சையான விருப்பும் உள்ளது. வாழ்வில் நீங்கள் எங்கே சென்றாலும் உங்களுடன் காவிச் செல்லும் அந்த ஆனந்தத்தைக் கண்டுகொள்ளுங்கள். காலத்தால் மாற்றமடையாத அந்த நிறைவைக் கண்டுகொள்ளுங்கள். மாற்றமடையாத அந்த விடயத்தைக் கண்டுபிடித்து அதில் இந்த உயிர் வாழ்வு என்னும் படகைக் கட்டிவையுங்கள். உங்கள் உள்ளே உள்ள அந்த அழகுடன் உங்களை நங்கூரமிடுங்கள். அப்போது நீங்கள் அடித்துச் செல்லப்படமாட்டீர்கள்.
கேள்வி: வேதனையை விரும்பாமையும் ஆனந்தத்தை விரும்புவதும் தன்பாட்டிலேயே நடைபெறுவன எனக் கூறுவதன் மூலம் நீங்கள் கருதுவதென்ன?
பதில்: நீங்கள் நிறைவாக இருக்கும் பொழுது உங்களைச் சந்தோஷமாக்கத் தேவையில்லை. நீங்கள் தானாகவே சந்தோஷமாக இருப்பீர்கள். நீங்கள் நிறைவாக இருக்கும் பொழுது நீங்கள் தானாகவே இரக்கமுடையவர்களாக மாறுவீர்கள். இரக்கமாக இருப்பதற்கு உங்களுக்கு கற்றுத்தரத் தேவையில்லை. உங்கள் இயற்கைத் தன்மை இதுதான்.
கேள்வி: எமது இயல்பு எளிமையானது என நீங்கள் கூறுகின்றீர்கள். ஆனால், எனக்கு வாழ்வு சிக்கலானதாகவுள்ளது. நான் சிக்கலானவனாக உள்ளேன். மற்றவர்களும் சிக்கலானவர்களாகவே உள்ளனர்.
பதில்: அநேக மக்கள் அற்புதமான அளவு சிக்கலானவர்களாக வருவதன் மூலம் எளிமையானவர்களாக வரத் தெண்டிக்கின்றார்கள். உண்மையிலேயே எளிமை நிலை எப்படியானது என்பதை நாம் விளங்கிக் கொள்வதில்லை. எளிமையை விளங்கிக் கொள்வதற்கு விடயங்களை எது சிக்கலானதாக மாற்றுகின்றதென்பதை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். உங்கள் வாழ்வை சிக்கலாக்குவது எது? நீங்கள் ஒருபோதும் உங்கள் உள்ளே உள்ள அந்த எளிமைக்கு அறிமுகம் செய்து வைக்கப்படவில்லை. உங்கள் உள்ளே உள்ள அந்த அழகிற்கு அறிமுகம் செய்து வைக்கப்படவில்லை. எப்பொழுது உங்களுக்கு அவை அறிமுகம் செய்துவைக்கப்படுகின்றனவோ அன்றுதான் உங்களால் வாழ ஆரம்பிக்க முடியும். ஏனெனில், நீங்கள் அதை விளங்கிக்கொள்கின்றீர்கள்.
உண்மையிலேயே நான் மக்களை அவர்களுக்கே அறிமுகம் செய்து வைப்பதற்காகப் பல்வேறுபட்ட இடங்களுக்குப் பிரயாணம் செய்கின்றேன். அறிமுகம் ஒன்றை நான் உங்களுக்குச் செய்துள்ளேன். இந்த அறிமுகத்தைத் தான் நான் செய்துவைக்க விரும்புகின்றேன். |