* பராக் ஒபாமா குற்றச்சாட்டு
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக களமிறங்குவதற்காக தீவிரமாகப் போட்டியிட்டு வரும் செனட்டர் ஹிலாரி கிளின்டன் மக்களைப் பயமுறுத்தி வாக்குகளைப் பெறும் முயற்சியில் இறங்கியிருப்பதாக மற்றைய செனட்டரான பராக் ஒபாமா குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஒபாமாவும், ஹிலாரியும் கடுமையாக மோதிவருகின்றனர். இந்தப் போட்டியில் ஹிலாரியை விட சற்று முன்னிலையில் இருக்கிறார் ஒபாமா. நாளை ஓஹியோ, டெக்ஸாஸ் ஆகிய முக்கிய மாநிலங்களில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் தேர்தல்கள் நடக்க இருக்கின்றன. இந்த இரு மாநிலங்களிலும் ஹிலாரிக்கு தோல்வி ஏற்பட்டால் அதன் பிறகு அவர் போட்டியிலிருப்பதில் அர்த்தமில்லை.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஹிலாரி தொலைக்காட்சி விளம்பரம் ஒன்றை வெளியிட்டார். அதில், குழந்தைகள் தூங்கிக் கொண்டிருக்கும் காட்சி முதலில் காட்டப்படுகின்றது. தேசிய பாதுகாப்பு அவசர நிலை தொடர்பான தொலைபேசி அழைப்பு வந்தால் அதற்குப் பதிலளிக்கக்கூடிய தகுதியானவர் யார் என்ற கேள்வியுடன் விளம்பரப்படம் முடிவடைகிறது. பெண்களின் வாக்குகளைக் கவரும் நோக்கில் இந்த விளம்பரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
டெக்ஸாஸில் பிரசார கூட்டம் ஒன்றில் பேசிய ஒபாமா, தாம் இது போன்ற விளம்பரங்களை பார்த்திருப்பதாகவும், இது மக்களை பயமுறுத்தி வாக்குகளைப் பெறும் முயற்சி எனவும் கூறினார்.
இந்தமுறை இதுபோன்ற முயற்சிகள் வெற்றி பெறப்போவதில்லை. யார் தொலைபேசி அழைப்புக்குப் பதிலளிக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. அந்தப் பிரச்சினைக்கு எந்தமாதிரியான தீர்வை நீங்கள் தருவீர்கள் என்பது தான் கேள்வி என்றார் ஒபாமா.
தொடர்ந்து 11 மாநிலங்களில் நடந்த வேட்பாளர் தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ள ஒபாமா டெக்ஸாஸ் மற்றும் ஓஹியோவில் வெற்றி பெற்றுவிட்டால் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராவது கிட்டத்தட்ட உறுதியாகிவிடும்.
இதற்கிடையே வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவுகள், டெக்ஸாஸ் மாநிலத்தில் ஒபாமாவுக்கு 48 சதவீத வாக்குகளும், ஹிலாரிக்கு 45 சதவீத வாக்குகளும் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளன. எனினும், கணக்கீட்டு தவறுகளால் 4 சதவீத வாக்குகள் மாறக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.